Skip to main content

ஊரடங்கால் வெறிச்சோடிய குற்றாலம் அருவிகள்... பசியால் கொகோ-கோலாவை கையில் எடுத்த குரங்கு!!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

The desolate Courtallam Falls; The monkey who took Coca-Cola in his hand due to hunger

 

தென்பாண்டிச் சீமையின் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், ஏழைகளின் சொர்க்கம் என்ற பேச்சு வழக்கு நீண்டகாலமாக உள்ளது. ஏனெனில் அந்த மலையைச் சுற்றி எட்டுக்கும் மேற்பட்ட அருவிகள் கொட்டுவதுதான். சாதாரணமாக மக்கள் அதில் அருவிக்குளியல் போடுவதால்தான் அந்தப் பெயர் வந்தது. தென்மேற்குப் பருவ மழை ஆரம்பமாகும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கேரளாவில் மையம்கொள்ளும் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் மேற்குத் தொடர்ச்சி மழையின் அடுத்த பக்கமிருக்கும் குற்றால மலைவரை இருக்கும்.

 

அதன் காரணமாக தென்காசி பகுதிகளில் 3 மாதமும் சாரல் மழை தொடர்ந்து பெய்வதால் குற்றால மலையிலிருக்கும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாய்க் கொட்டும். அதனால்தான் இதனை ஏழை மக்களின் கோடை வாசஸ்தலம் என்கிறார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை காலத்தில் குற்றால மலைகளில் மழை பெய்ததின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி போன்ற 8 அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாய்க் கொட்டியது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் லாக்டவுண் அறிவிக்கப்பட்டதால் அந்த சீசன் காலங்களில் குற்றால அருவிகளில் மக்கள் குளியல் போடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

 

The desolate Courtallam Falls; The monkey who took Coca-Cola in his hand due to hunger

 

அதன் பிறகு தளர்த்தப்பட்ட லாக்டவுணில் மக்கள் அருவிக் குளியல் போட அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், குற்றால சீசனை அனுபவிக்கவரும் மக்களின் கூட்டத்தால் அந்நகரில் வியாபாரம் பொருட்டு களைகட்டும் கடைகளில் வியாபாரத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் கடந்த வருடம், குற்றாலத்தையே பிழைப்புத் தொழிலாக நம்பி காலம்காலமாக வியாபாரம் செய்துவரும் பல நூறு வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

 

‘இது போகட்டும், அடுத்த வருடமாவது குற்றாலத்தில் அருவிகள் கொட்டும், தடையேதும் இருக்காது. வியாபாரத்தை தொடர்வதற்கு வசதியாக இருக்கும். வருமானமின்றித் தவித்த நமது வாழ்வில் விடியல் பிறக்கு’மென்று நம்பியிருந்தார்கள். ஆனால் கடந்த மாதம் தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்த கரோனா இரண்டாம் அலை சுனாமியாக தாக்கியதால், தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கைப் பிறப்பித்தது. இதனால் நம்பிக்கையோடிருந்த அந்த வியாபாரிகள் இடிந்தே போனார்கள். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளாவில் தென்மேற்குப் பருவமழை சில நாட்களில் தொடங்கும் என்று வானிலைத் தகவல்கள் தெரிவித்ததால் அதற்கான சூழல் அங்கு நிலவியது.

 

The desolate Courtallam Falls; The monkey who took Coca-Cola in his hand due to hunger

 

கோடை பருவ மழையும் ஆரம்பித்தது. அதன் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் தென்காசி மாவட்டப் பகுதிகளில் தென் மேற்குப் பருவக்காற்று இதமாக வீசியது. இந்த சாரல் மழை காரணமாக, தற்போது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வஞ்சனையின்றி கொட்டுகிறது. ஆனால் குளிக்கத்தான் மக்களில்லை. காரணம் முழு ஊரடங்கு. இது இப்படியிருக்க, குற்றாலப் பகுதிகளிலிருக்கும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் சீசன் காலங்களில் மக்கள் கூட்டத்தால் தரப்படும் உணவுகளை உண்டு மகிழ்ந்தன.

 

மலையில் கிடைக்கும் பழங்கள் தவிர, மக்கள் போடும் உணவுகளும் அந்த வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கிவந்தன. ஆனால், தற்போது அந்த விலங்குகளின் நிலையோ மிகவும் பரிதாபம். ஏனெனில், குற்றால நகரில் மக்கள் கூட்டமில்லாததால் அந்த வன விலங்குகள் உணவுக்காக பரிதாபமாக அலைபாய்வதும் அல்லாடுவதும் வேதனையான ஒன்று. தடை காரணமாக இந்த வாயில்லா ஜீவன்களை மக்கள் அணுக முடியாது. ஆனால் அரசு நினைத்தால் அவற்றுக்கு உணவுப்படி அளக்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் வெப்பம்; செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

Published on 22/04/2024 | Edited on 23/04/2024
What to do? What not to do? on increasing heat in summer season

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

இதனிடையே, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், குழுந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பின்வருமாறு காண்போம்.

வெப்பத்தைத் தனித்துக்கொள்ள தாகம் எடுக்கவில்லை என்றாலும், பொது மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார குழுவினர் கூறுகின்றனர். ஒருவேளை அவசர வேளையாக வெளியே செல்ல நேரிட்டால், வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதே வேளையில், பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், எலுமிச்சை, தண்ணீர் போன்ற வீட்டில் செய்யக்கூடிய பானங்களைக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனையடுத்து, நண்பகலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ இல்லாமல் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலை தாக்கத்தின் போது, புரதச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனச் சுகாதார துறையினர் கூறுகின்றனர். மேலும், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வெளியே கட்டி போடாமல் நிழலில் கட்டி வைக்க வேண்டும்.

அந்தப் பிராணிகளுக்கும் அதிக தண்ணீரை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டை அடிக்கடி தண்ணீர் மூலம் சுத்தம் செய்து குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொது மக்கள் மேற்கொண்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Next Story

திடீர் மழை... திடீர் வெள்ளம்... வற்றிய அருவி

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

அருவிகளின் நகரமான குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதமே தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக சீசன் துவங்கும். அதன் விளைவாக கோடையிலும் குற்றால நகரில் குளிர் சீசன் தொடங்க, தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலையடிக்கும்.

 

தற்போது சீசனுக்கான சூழல்கள் தென்பட்டாலும் தூறல்கள் இல்லாத நேரத்தில் நேற்றைய தினம் 27 ஆண்டுகளுக்கு பின்பு வரலாறு காணாத அளவில் சென்னையில் திடீரென கனமழை பெய்ததின் காரணமாக வெப்பம் தணிந்தோடு சாலைகளில் மழைநீர் ஓடத்தொடங்கியது. அதேபோன்று நேற்று மாலை குற்றால மழையின் நீர்பிடிப்பு பகுதியில் அரை மணி நேரம் மின்னல் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சிறிது நேரத்திற்குள் மெயினருவி உள்ளிட்ட அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் காலையில் அருவிகளில் தண்ணீர் குறைந்து விட்டது. இது குற்றால சீசனுடன் இணைந்த மழையா அல்லது வானிலை மையம் அறிவித்தபடி தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையுடன் சேர்ந்ததா என்ற சந்தேகம் நீடிக்கிறது.