Skip to main content

“போலீஸ் கேஸ் வேண்டாம் சார்... எங்க அம்மா அப்பா பாவம்” - கண் கலங்கிய சிறுமி 

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

 deputy mayor who stopped the girl from being forced into marriage

 

சிதம்பரம் அருகே இருளர் பழங்குடி மாணவிக்கு நடக்க இருந்த கட்டாய குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர்.

 

சிதம்பரம் அருகே கிள்ளை தளபதி நகரைச் சேர்ந்த மீனா, ராஜா  தம்பதியினருக்கு 17 வயது மற்றும் 11 வயதில் இரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் 17 வயதுள்ள தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு 12 ஆம் வகுப்புக்குச் செல்கிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் அக்கா மகன் செல்வா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு வறுமையின் காரணமாகச் சிறுவயதில் தேவியை திருமண பந்தம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள்.

 

அதன்படி தற்போது கோடை விடுமுறை  நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு ராஜா குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு செல்வா குடும்பத்தையும் வரவழைத்துத் திருமண ஏற்பாடு நடந்துள்ளது. இந்தத் திருமணத்திற்கு தேவிக்கு உடன்படவில்லை. பின்னர் அவர் எப்படியாவது 12 ஆம் வகுப்பு படித்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணி இரவில் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு யாருக்கும் தெரியாமல் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நடந்தே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர்  இந்தச் சிறுமியைப் பார்த்து யார்? இந்த நேரத்தில் எங்கே போகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு தேவி அழுதுகொண்டே நடந்த விபரத்தைச் சொன்னவுடன் அவர் தேவியை பேருந்து நிலையம் அழைத்து வந்து டீ, பன் வாங்கிக் கொடுத்து சிதம்பரத்திற்கு பேருந்து ஏற்றி அனுப்பியுள்ளார்.

 

பின்னர் சிதம்பரம் வந்த தேவி கிள்ளை தளபதி நகர் கிராம தலைவர் சின்னமணி வீட்டிற்குச் சென்று நடந்த தகவலைக் கூறி படிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் அதிர்ச்சி அடைந்து தேவியிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது தேவி, போலீஸ் கேஸ் வேண்டாம் சார் எங்க அப்பா, அம்மா பாவம் என்று கண் கலங்கியுள்ளார். இது அங்கிருந்த அனைவரின் கண்களைக் குளமாக்கியது. கிள்ளை ரவீந்திரன் தேவியின் அப்பா ராஜாவிற்கு ஃபோன் செய்து உடனே  கிள்ளைக்கு வர வேண்டும் இல்லையேல் நீ இருக்கும் இடம் தேடி போலீஸ் வரும் என்று எச்சரித்துள்ளார்.

 

இதனைக் கேட்ட ராஜா உடனே ஊருக்கு குடும்பத்துடன் திரும்பியுள்ளார். அப்போது கிள்ளை ரவீந்திரன், கிள்ளை தளபதி நகர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ராஜா குடும்பத்தை அழைத்து ராஜா மற்றும் அவரது மனைவிக்கு அறிவுரை வழங்கி,  தேவி கல்லூரி படிப்பு முடியும் வரை முழு செலவை அவரே ஏற்றுக் கொள்வதாகவும்  படிப்பைப் பற்றி இனி கவலை வேண்டாம் என்றும், எந்தத் தொந்தரவு இல்லாமல் படிக்க விடுங்க எனக்கூறி திருமண நேரத்தில் தேவையான உதவியையும் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும் கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் Al கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் தேவி மீது தனி கவனம் செலுத்தி நல்ல முறையில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்குத் தேவையான பள்ளிக் கட்டணம் மற்றும் புத்தகம் உள்ளிட்டவை குறித்து அவரே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கு தேவியின் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்தத் தகவல் அறிந்து கிள்ளை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு'-தலைகுனிய வைத்த சிறுமிகளின் வைரல் வீடியோ!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
shocking video of school girls

திருப்பூரில் பள்ளி கழிவறையைப் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள குமாரபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி உள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயின்று வந்த இரண்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார் தலைமை ஆசிரியரான இளமதி ஈஸ்வரி. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகள் பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாராபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை நிர்பந்தித்து கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக  அறிவியல் ஆசிரியை சித்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்தச் சிறுமிகள்  பேசி வெளியிடப்பட்ட வீடியோவில், 'யார் ஸ்கூல் பாத்ரூமை சுத்தம் செய்தது; நாங்க ரெண்டு பேரும்தான் பண்ணுவோம். யார் உங்களை பண்ண சொல்வது; எச்.எம் மிஸ், சயின்ஸ் மிஸ். நீங்கள் கழுவ மாட்டேன் எனச் சொல்ல வேண்டியது தானே; சொன்னா திட்டுவாங்க. எதிர்த்தா பேசுறனு குச்சியை எடுத்து வெளுப்பாங்க.  உங்கள் வீட்டில் சொல்ல வேண்டியது தானே; வீட்டில் சொல்வதற்கு ஒரு மாதிரியா இருக்கு' எனப் பேசும் அந்த வீடியோ மேலும் வைரலாகி வருகிறது.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.