இன்று (10/11/2021) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான நிலையில், ஆறு மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் மாதம் 11- ஆம் தேதி தமிழ்நாடு வட கடலோர பகுதியைக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடையும். காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று மாலை மற்றும் நாளை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால், பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது.