Skip to main content

“சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல” - இந்து சமய அறநிலையத்துறை

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

 Department of Hindu Charities says Chidambaram Nataraja temple does not belong to the Dikshitars

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் ஆண்டாண்டு காலமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் அறிவித்தனர். இதனை அனைத்து தரப்பிலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கொரோனா காலம் முடிந்த பிறகும் அவர்கள் தீட்சிதர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கோவிலில் கனகசபையில் ஏறி வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என அரசாணை வெளியிட்டது. இதனை ஒட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் தரிசனம் செய்து வந்தனர். 

 

இந்த நிலையில் ஆனித் திருமஞ்சனத் தேர் மற்றும் தரிசன விழாவையொட்டி தீட்சிதர்கள் நான்கு நாட்களுக்கு கனகசபையில் பொதுமக்கள் வழிபட அனுமதி இல்லை எனப் பதாகை வைத்தனர். இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பதாகைகளை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர்.

 

இதனையொட்டி கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி மாலை தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டு பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில். கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தமிழக அரசின் அரசாணை, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதால், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. அதனால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனவும் கூறியிருந்தது.

 

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்? மேலும்,  தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக ஒரு மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தொடர்ந்திருப்பது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கை அக்டோபர் மாதத்தில் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (14-10-23) சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது,  ‘சிதம்பரம் கனகசபை தரிசன நடைமுறையை மாற்றும் அதிகாரம் தீட்சிதர்களுக்கு இல்லை. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலயப் பிரவேச சட்டத்திற்கு எதிரானது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது கோவில், தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது” என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.