Skip to main content

ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 வீடுகள் இடிப்பு; வருவாய்த்துறை அதிரடி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Demolition of 4 houses built encroaching on lake land; Revenue Department action!
மாதிரி படம் 

 

எடப்பாடி அருகே, ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த நான்கு வீடுகளை வருவாய்த்துறை அலுவலர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

 

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வெள்ளநாயக்கன்பாளையத்தில் அச்சம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஆய்வு செய்த நகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள், அங்கு ஏரி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளைக் காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவிக்கை அனுப்பினர். 

 

இதையடுத்து சிலர் தாங்கள் கட்டியிருந்த வீடுகளைக் காலி செய்தனர். சிலர் அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த நான்கு வீடுகளையும் வருவாய்த்துறை அலுவலர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். எடப்பாடி நகராட்சி கட்டட ஆய்வாளர் இயற்கை பிரியன், வருவாய் அலுவலர் குமரகுருபரன் மற்றும் வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் நீர்நிலைப் புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. 

 

 

சார்ந்த செய்திகள்