Skip to main content

அழிந்து வரும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கோயிலை பாதுகாக்க கோரிக்கை

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
demand to protect the endangered historic temple

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மேலக்கொடுமலூரில் ஒரு சிவன் கோயில் உள்ளது. பாண்டியர், விஜயநகர அரசுகளின் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகள், சிற்பங்கள், கட்டடக்கலை சிறப்புகளைக் கொண்டது. இது தனது கடந்த காலச் சிறப்பை இழந்து தற்போது சிதிலமடைந்து, அழியும் நிலையிலுள்ளது. இக்கோயிலை பாதுகாக்க ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “மேலக்கொடுமலூர் குமுலீஸ்வரர் கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட சிறிய கோயில். எனினும் அழகிய தேவகோட்டம், விருத்தஸ்புடிதம் போன்ற அமைப்புகளுடன் கருவறை, அர்த்தமண்டபத்துடன் உள்ளது. நுழைவுவாயிலில் கஜலட்சுமி உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் சதுரவடிவ ஆவுடையுடன் லிங்கம் உள்ளது. இங்கிருந்த இரு கல்வெட்டுகளை மத்திய தொல்லியல் துறை 1907-ல் பதிவு செய்துள்ளது.

கி.பி.11-ம் நூற்றாண்டு சோழர் கல்வெட்டுகளில் உத்தமசோழநல்லூர் எனப்படும் இவ்வூர், கி.பி.13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியில் உத்தமபாண்டியநல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. கல்வெட்டில் இறைவன் உத்தமபாண்டீஸ்வரமுடையார் எனப்படுகிறார். இவ்வூரைச் சேர்ந்த அரையன் யாதவராயன், உச்சிபூசைக்காக நிறுவிய கண்டவிரமிண்டன் என்ற சந்திக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக, மன்னர் சுந்தரபாண்டியன் வடதலைச் செம்பிநாட்டு கொற்றூர், கண்ணிப்பேரி, உழையூர் ஆகிய ஊர்களை தானமாகக் கொடுத்துள்ளார். இவ்வூர்களில் விளைந்த நிலத்துக்கு வரி விதிக்கப்பட்டு கோயிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வரி, நிலத்தையும் அதில் விளைந்த பயிரையும் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நன்செய் நிலத்தின் ஒவ்வொரு 'மா' நிலத்திற்கும் 3/8 காசும், குறுவை விளைந்த நிலத்துக்கு முக்கால் காசும், ஐப்பசிக்குறுவை விளைந்த நிலத்துக்கு அரைக் காசும், துலா இறைத்து விளைந்த நிலத்துக்கு கால் காசும், எள், வரகு, தினை விளைந்த நிலத்துக்கு ஒன்றே கால் திரமம் காசும் வரியாகப் பெற்றிருக்கிறார்கள். இதே போன்ற ஒரு கல்வெட்டு சிவகாசி அருகிலுள்ள ஈஞ்சார் சிவன் கோயிலிலும் உள்ளது.

இங்குள்ள கி.பி.1534-ம் ஆண்டுக் கல்வெட்டு, விஜயநகர மன்னர் இம்மடி அச்சுத தேவமகாராயர், தனுஷ்கோடியில் இருந்த சேது மாதவப்பெருமாள், ராமநாதன் ஆகிய கோயில்களுக்கு மேலக்கொடுமலூரைத் தானமாக வழங்கியுள்ளார். இவ்வூரின் ஒரு பகுதியை சிவன் கோயிலுக்கு தேவதானமாகவும் மறு பகுதியை தனுஷ்கோடி கோயிலுக்கு திருவிடையாட்டமாகவும் கொடுத்துள்ளார். அழிந்துபோன தனுஷ்கோடியில் பழமையான இரு கோயில்கள் இருந்ததற்கு இக்கல்வெட்டு ஆதாரமாக உள்ளது.

கல்வெட்டு, கட்டடக்கலைச் சிறப்பு வாய்ந்த இக்கோயில், தற்போது முழுவதும் சிதிலமடைந்த நிலையில் குப்பைகள் போடும் இடமாக மாறியுள்ளது. வெளிப்பகுதியில் இருந்த தேவகோட்டங்கள் சிதைந்துள்ளன. பிரஸ்தரத்தின் மேற்பகுதி விமானம் இல்லை. தொல்லியல் சிறப்பு கொண்ட இக்கோயிலை பழுது நீக்கி பாதுகாக்கவேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.