Skip to main content

வாழ்வாதாரத்திற்காக போராடும் 16 மாவட்ட விவசாயிகள்!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

உயர்மின் கோபுர விவகாரம் தொடர்ந்து விவசாயிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட 16 மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டால் தங்களின் விளைநிலத்தின் மதிப்பு மிக கடுமையாகக் குறையும், விளைபொருள்கள் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும், விவசாயம் செய்ய முடியாது,  வங்கிகளில் கடன் பெறுவதில் பெரும் சிரமம்  ஏற்படும், மொத்தத்தில் எங்களது  வாழ்வாதாரமே முழுமையாக  பறிபோகும் நிலை உருவாகிவிடும் என வேதனையுடன் கூறுவதோடு விளை நிலத்தை காக்க  பல கட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட வேண்டும். 

w


விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக கேபிள் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

 

 விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் இன்று ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும்  விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த ஈரோட்டை சுற்றி கருங்கல்பாளையம் காவேரிக்கரை செக் போஸ்ட், சோலார், ரங்கம்பாளையம், திண்டல், அக்ரஹாரம் உட்பட 8 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து 1000க்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காத்திருப்பு போராட்டத்திற்காக வந்த விவசாயிகளை ஆங்காங்கே வலுகட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

 

இருப்பினும் பல விவசாயிகள் ஆட்சியர்  அலுவலகத்திற்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்றனர்.   தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் முனுசாமி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவரது தலைமையில் விவசாயிகள் பலர் தரையில் படுத்தபடி கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக  கைது செய்தனர்.

 

போலீசாரின் தடைகளை தாண்டி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு நுழைய முயன்ற பல விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரைக் கண்டித்தும் கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவசாயிகள் ஈரோட்டில் 10 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 300 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது