Skip to main content

வரத்து தொடங்கியது... தக்காளி விலை குறைந்தது..!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

 Delivery has started ... Tomato prices are low ..!

 

தமிழகம் முழுக்க வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பரவலாகப் பெய்து வருகிறது. இதன் காரணமாகக் காய்கறிகள் வரத்து மிகவும் குறைந்து விலை அதிகரித்தது. குறிப்பாகத் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

 

குறிப்பாக ஈரோடு மார்கெட்டுக்கு தினமும் 7,000 பெட்டிகள் வரவேண்டிய இடத்தில் 2,000 பெட்டிகள் மட்டுமே வந்தது. ஈரோடு வ.உ.சி.பூங்கா, நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோவிற்கு ரூபாய் 130 வரை விற்றது. வெளியில் கடைகளில் சில்லறை விலையில் ரூபாய்.150 வரை விற்றது. இதனால் பெண்கள், நடுத்தர மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தக்காளி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து 26 ந் தேதி இரவு முதல் அதிகரித்தது.

 

இதன் காரணமாகத் தக்காளி விலையும் சரிந்தது. 27 ந் தேதி தாளவாடி கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து 10 லாரி லோடு தக்காளி மார்கெட்டுக்கு வரத்தானது. இதனால் 25 கிலோ தக்காளி பெட்டி ரூபாய் 900 முதல் 1000 வரை விற்பனையானது. 14 கிலோ பெட்டி ரூபாய் 400 முதல் 500 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 30 முதல் 50 வரை விற்பனை நடந்தது. வெளியிடங்களில் கடைகளில் சில்லறை விற்பனை ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையானது. தக்காளி விலை சரிவால் பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஈரோடு போலயே அனைத்து ஊர்களுக்கும் தக்காளி வரத்து அதிகமாக வருவதால் இனி அடுத்தடுத்த நாட்களில் விலை பெருமளவு குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.