Skip to main content

துணைமின் நிலையம் அமைப்பதில் தாமதம்;இருளில் மூழ்கும் நிலையில் 13 கிராமங்கள்!

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றுக்கு நடுவில் அமைந்துள்ளன மருங்கூர், காவனூர், கீரனூர், தேவங்குடி, வல்லியம் உள்ளிட்ட சுமார் 13 கிராமங்கள். இக்கிராமங்களில் 15,000 –த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விளை நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர்.

நெல், கரும்பு என  மூப்போகமும் விளையக்கூடிய இக்கிராமங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடாக மின்சாரம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் உள்ள 110 கிலோ வாட் தன்மை கொண்ட பூதாமூர் துணை மின் நிலையத்திலிருந்து 33 கிலோ வாட் தன்மை கொண்ட மின்சாரத்தினை மேலப்பாலையூர் மற்றும் கீழப்பாலையூர் கிராமங்களில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து கிராமங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. மழை மற்றும் புயல் காலங்களில் ஏற்படும் மின் சேதங்களால், பூதாமூரில் இருந்து 20 கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள இக்கிராமங்களுக்கு மின்சாரம் இல்லாமல் இருளில் வாழும் நிலை தொடர் கதையாகி விடுகிறது. மேலும் சம்பா மற்றும்  குறுவை சாகுபடி தொடங்கும் காலத்தில், இக்கிராமங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு தேவையான மும்முனை மின்சாரம் மணிக்கணக்கில் மட்டும் விநியோகிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

 

 Delay in setting up of sub station, 13 villages in darkness


இம்மின் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு இக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஒன்றுக்கூடி, பூதாமூரில் அமைந்துள்ள 110 கிலோவாட் தன்மை கொண்ட துணை மின் நிலையம் போல், மேலப்பாளையூர் கிராமத்தில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற மின்சார வாரியம் அதற்கான ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  துணை மின் நிலையம் அமைப்பதற்காக மேலப்பாலையூர் கிராமத்தில் அமைந்துள்ள புளிய மரதோப்பு தேர்வு செய்யப்பட்டது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட தோப்பில் உள்ள மரங்களை அகற்றுவதற்காக திருமுட்டம் வருவாய்துறை அதிகாரிகள் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் ரூ 4.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்த குத்தகைதாரர் புளியமரத்தில் தேவையான கிளைகள் மற்றும் மரங்களை மட்டும் வெட்டிக்கொண்டு, புளிய மர வேரினை அகற்றாமல் சென்று விட்டார். இதனால் துணை மின் நிலையம் அமைப்பதற்கு மின்சார வாரியத்தின் கட்டுமான பிரிவுக்கு ஒப்புதல் வழங்கியும், புளிய மரத்தின் வேர்கள் அகற்றப்படாமல் இருப்பதினால் பணியினை தொடர காலந்தாழ்த்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருமுட்டம் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

 Delay in setting up of sub station, 13 villages in darkness

 

மின்சாரதுறையினர் மேலப்பாலையூரில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு தயாராக உள்ள நிலையில், திருமுட்டம் வருவாய்துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கால், கிராம வளர்ச்சிக்காக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்கள் வீணாக போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் புளிய மரத்தை குத்தகை எடுத்தவருக்கும், வருவாய்துறை அதிகாரிகளுக்கும் இடையே பண பரிவர்த்தனை மூலம் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்றும், அதனால்தான் வருவாய்துறை அதிகாரிகள் அலட்சியபோக்காக செயல்படுகின்றானரா என்று பொதுமக்கள் சந்தேகம் அடைகின்றனர்.

குடிநீர், கால்நடைகள், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு மூலதனமாக இருக்கும் மின்சாரத்தினை தங்கு தடையின்றி தரக்கடிய துணை மின்நிலையத்தை மேலப்பாலையூரில் அமைத்திட கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், விரைவில் விவசாயிகளை திரட்டி திருமுட்டம் வருவாய்துறை அலுவலகத்தின் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.