Skip to main content

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் குறைபாடு?; குழு அமைத்த ரயில்வே துறை அமைச்சர்

Published on 10/12/2024 | Edited on 10/12/2024
Defect in Pampan New Railway Bridge

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்கு பதிலாக ரூ.550 கோடி செலவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கடந்த நவம்பர் 13ஆம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து இந்தியன் ரயில்வே வாரியத்தின் செயலருக்கு ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், பாலத்தை திட்டமிடுவதற்கு முன்பு, ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும். ஆனால், பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த பாலத்தில் அரிப்பு, துருப்பிடித்தல் பிரச்சனைக்கான தீர்வு காண போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலம் கட்டுப்பாட்டு அறையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள இண்டர்லாக் சர்கியூக்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை பாதுக்காப்பற்ற சூழலை வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாலத்தில் குறைப்பாடுகள் இருப்பதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, பாலத்தின் சோதனை மற்றும் சரிபார்ப்பு முழுமையாக முடிந்த பிறகே, ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பாலத்தின் வடிவமைப்பைச் சென்னை ஐஐடி மற்றும் மும்பை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து தரமதிப்பீடு வழங்கியுள்ளதாகவும், புதிய ரயில் பாலம் தரமான வடிவமைப்போடு கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

பாம்பன் புதிய பாலத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எழுப்பிய கவலைகளை ஆய்வு செய்யும் ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். குழுவில் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) மற்றும் தெற்கு ரயில்வேயின் பாலம் நிபுணர்கள் மற்றும் ஒரு சுயாதீன பாதுகாப்பு ஆலோசகர் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்