Defamation case against Thirumavalavan dismissed

பாமக தரப்பில் திருமாவளவன் எம்.பிமீது தொடர்ந்த அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி, சேலம் நீதிமன்றம் வழக்கைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வன்னியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி, சேலம் 4வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கைத்தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் இமயவரம்பன் மனுதாக்கல் செய்தார்.

Advertisment

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, குணசேகர், சிவா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஐயப்பமணி, பகத்சிங் ஆஜராகி வாதாடினர்.இந்த வழக்கு ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், திருமாவளவன் மீதான அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கைத்தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்குவந்ததால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்து இருந்தனர். இதனால் அந்த வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கார்த்தி தரப்பில் கூறப்பட்டது.