Skip to main content

ஏழுமணிநேர இறுதி ஊர்வலம்; ஸ்தம்பித்த நெல்லை!(படங்கள்)

Published on 29/05/2024 | Edited on 29/05/2024

 

நெல்லை மாவட்டத்தின் மூன்றடைப்பு பகுதியிலுள்ளது வாகைகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்ராஜன். அவர் மீது பல்வேறு வழக்குகளிருப்பதால் அந்தப் பகுதியின் காவல் நிலையத்தின் சரித்திர பதிவேட்டில் ரவுடி என்று இடம் பெற்றவர். கடந்த 20ஆம் தேதியன்று தீபக்ராஜன் தன் காதலி மற்றும் நண்பர்களுடன் நெல்லை கே.டி.சி. நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவரை சுற்றி வளைத்த கூலிப்படையினர் விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றனர். இதனால் நெல்லை சுற்று வட்டாரங்களில் பதற்றமும் பற்றிக் கொண்டது.

கொலைச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான் முத்து சரவணன் உள்ளிட்ட சிலரைப் போலீசார் கைது செய்தனர். ஆனாலும் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாதவரை உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்களும் ஊர்மக்களும் தெரிவித்துவிட ஏழு நாட்களாக உடல் வாங்கப்படாத நிலையில் போராட்டம் நீடித்தது. கிராமப் புறங்களிலோ பீதியும் தணியாமலிருந்தது.

தீவிர விசாரணையில் நவீன் தலைமையிலான கூலிப்படையினர்தான் சம்பவத்தில் ஈடுபட்டது எனத் தெரிய வந்திருக்கிறது. இதில் முக்கிய குற்றவாளிகளான நவீன், லெப்ட் முருகன், லட்சுமி காந்தன் சரவணன் உள்ளிட்ட நான்கு பேரும் திருச்சி போலீசாரால் வளைக்கப்பட்டு நெல்லை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனிடையே முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்குப் பின்னர் 27 அன்று தீபக் ராஜனின் உடல் காலை 10.30 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலைப் பெறுவதற்கு நண்பர்கள், உறவினர்கள், சமுதாயத்தினர் திரண்டு வந்திருந்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் ஆதர்ஷ் பச்சோரா உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலம் புறப்பட்டது. கன்னியாகுமரி தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் பாளையிலிருந்து அவரது சொந்த ஊரான வாகைகுளம் 21 கி.மீ தொலைவு. அத்தனை தொலைவு உடல் உறவினர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் உடல் சென்ற வாகனத்தின் முன்னும் பின்னும் அணி வகுத்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கூட்டம் சென்றதால் இருபுறமும் செல்கிற வாகனங்கள் தடைபட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பல மணி நேரம் நீடிக்க தாமதமாவதை உணர்ந்த எஸ்.பி. சிலம்பரசன் உடல் செல்கிற ஆம்புலன்சின் டிரைவரை மாற்றிவிட்டு போலீஸ் டிரைவரை அமர்த்தியவர் சற்று வேகமாக இயக்கச் சொல்ல அவருடன் இளைஞர்கள் சிலர் கடும் வாக்குவாதம் செய்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஏழு மணி நேர ஊர்வலத்திற்கு பின் மாலை 5.30 மணியளவில் அவரது கிராமத்தை வந்தடைந்ததையடுத்து தீபக்ராஜனின் உடல் பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட சில நாடுகளின் புரட்சியாளர்களின் வரலாற்றுப் புத்தகங்கள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் படுகொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை திருச்சி போலீசார் வளைக்கும் போது அவர்கள் பிடியிலிருந்த நவீன், லெப்ட் முருகன் இருவரும் தப்பி ஒரு பெரிய சுவரைத் தாண்டிக் குதித்து ஓடினர். அதில் நவீனுக்கு வலது கையிலும், லெப்ட் முருகனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்குப் பின் அவர்களுக்கு மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த மாவுகட்டு சம்பவம் ஒரு சாராரிடையே அதிருப்தியைக் கிளப்பியுள்ளதாம்.

சார்ந்த செய்திகள்