Skip to main content

கலை நிகழ்ச்சிகளுடன் திருச்சியில் அலங்கார ஊர்தி! 

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

Decorative vehicle in Trichy

 

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற இரண்டு அலங்கார ஊர்திகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு வரவேற்றுப் பார்வையிட்டார்.

 

இந்த இரண்டு அலங்கார ஊர்திகள் ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.அய்யர், கண்ணியமிகு காயிதே மில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகசீலர் கக்கன் ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

 

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அலங்கார ஊர்திகள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  மாநகராட்சி ஆணையரா உள்ளிட்ட  பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் வருகை தந்து அலங்கார ஊர்திகளையும், கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டு சிறப்பு செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்