Death of a disabled prisoner on trial! Chief Minister orders transfer of inquiry to CBCID

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்குத்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர், கடந்த நவம்பர் மாதம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் தங்க நகைகளைத் திருடியதற்காக அண்மையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய மாற்றுத் திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சா ஆகியோர் சேந்தங்கலம் காவல்துறையினரால் கடந்த 11-1-2022 அன்று கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில், 12-1-2022 அன்று மாற்றுத் திறனாளி பிரபாகரன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில், அவர் சிகிச்சைக்காக உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை நரம்பியல் துறையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு 11-40 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு), சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவரையும், தலைமைக் காவலர் ஒருவரையும் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு. அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், ஆணையிட்டுள்ளார். மேலும், மாற்றுத் திறனாளி பிரபாகரன் உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணையைக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார்.