Skip to main content

உயிரோடு வந்த ‘இறந்த’ முதியவர்! - அதிரவைக்கும் அதிகாரிகளின் அலட்சியம்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

The ‘dead’ old man who came alive! - The negligence of the shaking authorities!

 

“நீங்க செத்துட்டீங்க.. கவர்மெண்ட் ரெக்கார்ட் சொல்லுது.. உங்களோட குடும்ப அட்டையை முடக்கிட்டோம். முதலமைச்சர் நிதியோ, மளிகைப் பொருளோ உங்களுக்கு கிடையாது..” சிவகாசி, ஆலங்குளம் பகுதி கரிசல்குளம் ரேஷன் கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துவந்த முதியவர் காளிமுத்துவிடம் அங்கிருந்த பெண் ஊழியர் கூலாகச் சொன்னார். (அந்த முதியவரை பெண் ஊழியர் ஒருமையிலேயே பேசியுள்ளார்).

 

“அம்மா.. நான் சாகல.. உங்க கண்ணுக்கு முன்னால உசிரோடதானே நிக்கிறேன்..” என பரிதவித்தார் காளிமுத்து. 

 

“உங்க நியாயத்தை தாலுகா ஆபீஸுக்குப் போயி பேசுங்க..” என விரட்டினார் அந்த ஊழியர்.

 

தாலுகா அலுவலகம் சென்ற காளிமுத்துவிடம் வி.ஏ.ஓ.-வை பார்க்கச் சொன்னார்கள். வி.ஏ.ஓ.வோ “என்கிட்ட எதுக்கு வர்றீங்க? தாலுகா ஆபீஸுக்குப் போங்க..” என்று எரிந்து விழுந்தார். நான்கு வாரங்கள் அலைக்கடித்துவிட்டு, “விருதுநகர் கலெக்டர் ஆபீஸுக்குப் போங்க..” என்று தாலுகா அலுவலகம் காளிமுத்துவிடம் கூற, மாவட்ட ஆட்சியர் அலுவலகமோ சென்னையைக் கை காட்டியிருக்கிறது.

 

அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கைகளால் நொந்துபோன காளிமுத்து, “வீட்டுக்காரம்மா இல்ல. எனக்கு வேற வழியில்ல. 100 ரூபாய்க்கு வாட்ச்மேன் வேலை பார்த்து ஏதோ வயித்த கழுவுனேன். நாலு வாரமா அதிகாரிகள பார்க்க அலைஞ்சதுல அந்த வேலையும் போச்சு. உசிரோட இருக்கும்போதே செத்துட்டேன்னு ரெக்கார்ட் பண்ணிட்டாங்க. இனி, பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.” என்றார் விரக்தியுடன். 

 

The ‘dead’ old man who came alive! - The negligence of the shaking authorities!

 

தனது புகாரை, வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி, தன்னுடைய ஸ்மார்ட் கார்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர காளிமுத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வெம்பக்கோட்டை தலைமை வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தத்திடம் பேசினோம் “நான் இங்கே ஜாய்ன் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆகுது. அதுக்கு முன்னால ஏதோ பெயர் மாறிருச்சு போல. இப்பக்கூட வாங்கய்யா.. வந்து ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க. ஸ்மார்ட் கார்டு வாங்கித் தர்றோம்னு சொன்னேன். ஏன்னு தெரியல. அவரு வரமாட்டேங்கிறார்.” என்றார். 

 

காளிமுத்துவோ “இத்தனை நாளு என்னை அலையவிட்டுட்டு, இப்ப பத்திரிகைகாரங்க கேள்வி கேட்டதும், கார்டு தர்றேன்னு சொல்லுறாங்களா? அவங்க ஆபீஸுக்கு நான் அலைஞ்சது போதும். கார்டை எங்கே வாங்கணுமோ, அங்கே வாங்கிக்கிறேன். என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர சாகடிச்சிருக்காங்களோ?” என்று புலம்பினார். 

 

காளிமுத்து போன்றவர்களை செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது அதிகாரிகளின் அலட்சியம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.