ஜாமீனில் வெளிவந்த நாளே மனைவியை கொலை செய்த  ரவுடி சுரட்டையன்!

mk

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அப்பூர் பாளையம் காலனியைச் சேர்ந்தவர் சுரட்டையன் என்கிற பிரபாகரன். பிரபல ரவுடியான இவர் நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக 13 வழக்குகள் உள்ளது. சென்ற வருடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது மனைவி புனிதா 7 வயது மகன் பிருத்திவிராஜ் சொந்த கிராமமான அப்பூர் பாளையம் காலனியில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று கோவை சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சுரட்டையன் நேராக தனது கிராமத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்திலேயே கணவன் மனைவியிடம் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிப் போக மனைவி என்றும் பாராமல் கொடூரமாக அடித்து கழுத்தை நெறிக்க பரிதாபமாக இறந்து போனார் புனிதா. பிறகு இறந்த மனைவியின் உடலை வீட்டுக்குள் வைத்து, வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானான் ரவுடி சுரட்டையன். அருகே உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பிணமாக கிடந்த புனிதாவின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜாமீனில் வெளிவந்தவுடன் ரவுடி சுரட்டையன் தனது மனைவியையே கொலை செய்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான ரவுடி சுரட்டையனை தனி படை அமைத்து தேடுகிறது நாமக்கல் போலீஸ் .

murder punitha surattaiyan
இதையும் படியுங்கள்
Subscribe