திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர் கோயில் பகுதியில் சென்னை பெங்களூர் செல்லும் ரயில்வே மார்க்கத்தில் மார்ச் 20ந் தேதி காலை ஒரு இளம்ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த தகவலை ரயில் ஓட்டுநர் ஆம்பூர் ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இரயில் நிலைய அதிகாரிகள், இரயில்வே போலிஸார், ஆம்பூர் தாலுக்கா போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இளம் வயதான இரண்டு பேரின் உடல் இருந்தது.
இதுப்பற்றி ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் விசாரித்தபோது, தற்கொலை செய்துக்கொண்ட இருவரும் ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த 29 வயதான ராமதாஸ் என்பதும், அந்த இளம்பெண் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். மார்ச் 19ந்தேதி தான் இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட இடத்தில் ஒரு செல்போன் இருந்துள்ளது. அந்த செல்போனில் ராமதாஸ் - சுமித்ரா தம்பதிகள் இறப்பதற்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ள போட்டோ அதில் இருந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்துக்கொண்ட மறுநாளே அவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார்கள் என்கிற கேள்வி காவல்துறைக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருவரின் குடும்பத்தாரிடம் தகவல் கூறி வரவைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.