ADVERTISEMENT

காதல் திருமணம் செய்த பெண் மர்ம மரணம்..! சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டி தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..! 

12:31 PM Jul 22, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். வெங்கடேசன் என்கிற 72 வயது தந்தை தாக்கல் செய்துள்ள மனுவில், தனது மகள் ஸ்வர்ண ப்ரியா எம்.டெக். முடித்து பெங்களூருவில் உள்ள டெக்ஸ்கோ நிறுவனத்தில் இரண்டு லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் பணியாற்றிவந்த நிலையில், திருவாரூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரைக் காதலித்ததாக குறிப்பிட்டுள்ளார். காதலை அரை மனதுடன் தாங்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, இருவருக்கும் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் திருமணம் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மருமகனின் தந்தை சுப்ரமணியன், தாய் திலகவதி, சகோதரர் ராஜகோபால், சகோதரரின் மனைவி வித்யா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த நிலையில், திருமணமான நாள் முதலே பல்வேறு காரணங்களுக்காக பணம் கேட்டு தன் மகளைத் துன்புறுத்தியதாக மனுவில் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மருமகனின் சகோதரர் ராஜகோபால் நடத்திவரும் நர்சரி பள்ளியை விரிவுபடுத்துவதற்காக 15 லட்சம் ரூபாயைத் தன் மகளிடம் கேட்டதாகவும், கடன் மூலம் அந்த தொகையை மகள் ஏற்பாடு செய்து கொடுத்த நிலையில், கடனை அடைக்காததுடன், மகளையே திருப்பி செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக மகள் தெரிவித்ததாகவும் மனுவில் கூறியுள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த அண்டு மார்ச் மாதம் முதல் மதுரை கூட்டுக் குடும்பத்தில் தங்கி வேலை பார்த்துவந்த நிலையில், உயிருக்கு ஆபத்து உள்ளதாக மகள் தெரிவித்ததால் பெங்களூருவுக்குச் செல்லும்படி அறிவுறுத்தியதாகவும், அவர் கடந்த ஜனவரி மாதம் கிளம்பியபோது, கணவரும், அவரது சகோதரரும் தடுத்து நிறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென மகள் ஸ்வர்ண ப்ரியா இறந்துவிட்டதாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி திருவாரூரில் இருந்து தகவல் வந்ததால், அங்குள்ள திருவாரூர் நகரக் காவல் நிலையத்திற்குச் சென்று, மருமகன் மற்றும் அவர் குடும்பத்தினரால் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மகளின் மரணம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரிக்காமல் காவல்துறை வழக்குப் பதிவு செய்ததால், விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் அந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தனது மகன் நிரஞ்சன் மூலமாக ஏப்ரல் 30, மே 7, ஜூன் 24 ஆகிய தேதிகளில் காவல்துறையிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் மனு கொடுத்ததாகவும், அதில் நடவடிக்கை இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


எனவே மகள் ஸ்வர்ண ப்ரியா மரணம் குறித்த திருவாரூர் நகர காவல் நிலைய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT