daughter passes away due to the reason of her mom

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார் மகாலட்சுமி என்ற நதியா. இவருக்கும் புளியந்தோப்பு சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி (13) என்ற மகளும், நிதீஷ் குமார்(12) என்ற மகனும் உள்ளனர். சரவணகுமார் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

Advertisment

சரவணகுமார் இறந்ததிலிருந்து நதியா தனது தாய் வீடான கணுவாய்ப்பாளையம் பகுதியில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும், இதனால் அவருடைய குழந்தைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை என்றும் நதியாவின் தாயார் நாகமணி தன்னுடைய பேரக்குழந்தைகளைத் தானே வளர்ப்பதாகச் சொல்லி, நதியாவை கண்டித்து அடிக்கடி சண்டையிட்டிருக்கிறார். ஆனாலும் நதியா அதிகமாக செல்போனில் பேசுவதை விடவில்லை. நதியாவிற்கும், தாய் நாகமணிக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் நதியா தனது தாயைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

Advertisment

இதனால் மகளிடம் கோபித்துக்கொண்டு தனது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று தான் வீடு திரும்பியுள்ளார் நாகமணி. இந்நிலையில் நேற்றிரவும் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், அப்போது, நீ ஏன் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று தனது மகளைக் கண்டித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு சிறிது நேரத்தில் இருவரும் தாக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆத்திரம் அடங்காத நாகமணி இன்று அதிகாலை சுமார் 12.30 மணிக்குத் தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை ஆட்டுக்கல்லினை (மாவு ஆட்டும் கல்) பின்னந்தலையில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த காரமடை காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,சம்பவ இடத்தை மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி ஜெய்சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், தாய் நாகமணியை கைது செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பெற்ற தாயே தனது மகள் தலையில் குழவிக்கல்லினை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment