Skip to main content

மகள் மாயமானதால் விரக்தி; கணவருக்கு விஷம் கலந்த உணவு; எலி மருந்து குடித்து மனைவி தற்கொலை

Published on 23/09/2022 | Edited on 23/09/2022

 

 

daughter missing parents incident salem ammapet police investigation


சேலத்தில், மகள் மாயமானதால் விரக்தி அடைந்த தாயார், கணவருக்கு விஷம் கலந்த உணவை சாப்பிடக் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் பொன்னம்மாபேட்டை மல்லி தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 47). லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி சுஜாதா (வயது 39). இவர்களுக்கு 20 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ் 1 படித்து வருகிறார்.

 

இவர், அடிக்கடி அலைபேசியில் யாருடனோ பேசி வந்திருக்கிறார். இதனை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் அவர் மீண்டும் அலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் செப். 21- ஆம் தேதி, அலைபேசியில் பேசிய மகளை மீண்டும் தாய் சுஜாதா கண்டித்துள்ளார். 

 

அன்று மாலை 03.00 மணியளவில் திடீரென்று மகள் மாயமானார். தோழிகள் வீட்டில் தேடிப்பார்த்தும் அவள் சென்ற இடம் குறித்த விவரம் தெரியவில்லை. தான் திட்டியதால்தான் மகள் ஓடிச்சென்று விட்டாளோ என்ற குற்ற உணர்விலும், பாசத்திலும் தடுமாறிய சுஜாதா தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். கணவரையும் கொன்றுவிட எண்ணியுள்ளார். 

 

கடையில் இருந்து எலி மருந்தை வாங்கி வந்த அவர், கணவருக்குத் தெரியாமல் அவருக்கு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்து சாப்பிடக் கொடுத்துள்ளார். அதையறியாத கணவரும், உணவை சாப்பிட்டுள்ளார். அதையடுத்து சுஜாதாவும் விஷத்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் கணவன், மனைவி இருவரும் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜாதா இறந்தார். கணவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாயமான மகளையும் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி பங்கேற்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Ramdas, Anbumani participate in the BJP public meeting

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.