
தூத்துக்குடி மாவட்டம் சென்னயம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் கார்த்திபிரியா. 20 வயதான இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்த கார்த்திபிரியா வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை முத்துச்சாமி மாணவி கார்த்திபிரியாவை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
தந்தை கண்டித்ததால் மாணவி கார்த்தி பிரியா மனவேதனையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த கார்த்தி பிரியா விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். வெளியே சென்ற பெற்றோர் திரும்பி வந்து போது கார்த்தி பிரியா மயங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குத் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மாணவி கார்த்திபிரியா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.