daughter complained that my father misbehaved with many women

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 21 வயதான 'சானி லிடியா கிரேஸ்' என்பவர் பரபரப்பு புகார் ஒன்றைஅளித்தார். அதில், மதபோதகர் மற்றும் வழக்கறிஞர் என்ற போர்வையில் உள்ள எனது தந்தை மோசஸ் செல்லதுரை, பலருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகவும், சிலரை திருமணம் செய்துக்கொண்டு ஏமாற்றி வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையெல்லாம் தெரிந்து தன் அம்மா பிரிந்த நிலையில், அவரை முறையாக விவகாரத்து செய்யாமலேயே தந்தை, பல அப்பாவி பெண்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதாகப் புகாரில் தெரிவித்தார். காதலித்து தாய் தந்தை திருமணம் செய்து இருந்தாலும் திருமணத்தை மீறிய உறவிலேயே இருவரும் பிரிந்ததாகக் கூறும் சானி லிடியா கிரேஸ், தன் தந்தை மோசஸ் செல்லதுரையால் 24 வயதே ஆன தனது தோழி கருத்தரித்து, குழந்தை பெற்றதாக அதிர்ச்சி தகவலைக் கூறினார். அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியது போல, பலரையும் கர்ப்பமடையச் செய்து, பின் பணம் கொடுத்து ஏமாற்றி வருவதாகத் தந்தை மோசஸ் செல்லதுரையின் மீது அவரது மகள் சானி லிடியா கிரேஸ் பகீர் குற்றச்சாட்டைப் புகாரில் கூறினார். இது குறித்துக் கேட்டால் மோசஸ் செல்லதுரையின் தாயும் அவரின் தவறுக்கு உடந்தையாக இருந்து மிரட்டுவதாகக் கூறினார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட டிஜிபி அலுவலகம், திருநெல்வேலி காவல் ஆணையாளருக்கு அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சானி லிடியா கிரேஸ், ''ஐஜியை சந்தித்து எனது அப்பா மோசஸ் செல்லதுரை மீது புகார் கொடுத்தேன். திருமணத்தை மீறிய உறவால் எங்கள் குடும்பம் பிரிந்தது. ஆனால், இதுவரை, ஆனால் அப்பா தற்போது வரை அம்மாவுக்கு விவகாரத்து கொடுக்கவில்லை. வழக்கறிஞர் என்று புகார் கொடுக்க வந்த பெண்ணை கூட, விட்டு வைக்காமல் திருமணம் செய்து குழந்தை கூட பிறந்துவிட்டது. நான் எனது தாயுடன் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தபோதுதான், இதெல்லாம் தெரிய வந்தது. உடனே, மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தேன்.

Advertisment

அந்த விசராணையில் நேரில் ஆஜரான எனது தந்தை மோசஸ் செல்லதுரை, 'ஆயிரம் பெண்களைக் கூட திருமணம் செய்வேன் தப்பே இல்லை என்பது போல் தான் நடந்துக்கொண்டார். என்னிடம் ரூ.20,ரூ. 60 என்று லட்சத்தில் விலை பேசினார். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பாவின் திருமணத்தை மீறிய உறவால் இளம்பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உடனடியாக முடிவுகட்டுவதற்குப் புகார் அளித்தேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், “பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகார் கொடுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை. எனது நண்பரைக் கூட விட்டு வைக்காமல், அவளிடம் பழகி கர்ப்பமாக்கி விட்டார். அவளுக்கு இப்போது 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தையும் ஒரு நாள் என்னைப் போல் போராட வரும். அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் உள்ள எனது தாத்தாவின் குழுமம் என் அப்பாவுக்கு பலமாக உள்ளது. போலியாக மதபோதகர் சான்றிதழ் வாங்கி இருக்கிறார். இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. இதனைச் சமர்ப்பித்துள்ளேன்...'' என்று டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரைச் சானி லிடியா கிரேஸ் செய்தியாளர்களிடம் விரிவாகக் கூறினார்.

வழக்கறிஞர் தந்தையின் மீது பெற்ற மகளே பகீர் குற்றச்சாட்டுக் கூறியுள்ள நிலையில், இதை முற்றிலும் மறுத்த மோசஸ் செல்லதுரை பொய் புகார் என்று மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.