Dangerous bus journey of students! Severed toe

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் இருந்து நகரப் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி படிப்பதற்கும், வேலைக்காகவும் பல ஆயிரக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள். பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால், பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பேருந்து மேற்கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டும், பின்புறமுள்ள ஏணி படிக்கட்டுகளில் தொற்றிக்கொண்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள்.

அப்படி விழுப்புரத்திலிருந்து அரசூர் மடப்பட்டு வழியாக சேந்தநாடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் பள்ளி கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்படி செல்லும்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில், படிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த அந்த மாணவனின் கால் படிக்கட்டில் மோதி விரல் இரண்டு துண்டானது. அந்த மாணவனின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து நிறுத்தப்பட்டது.

உடனடியாக மாணவனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.