Skip to main content

சேலம் ஆவினில் தினசரி பால் கொள்முதல் 15 ஆயிரம் லிட்டர் அதிகரிப்பு! 

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Daily milk purchase in Salem Avin increases by 15 thousand liters!


சேலம் ஆவினில் தினசரி பால் கொள்முதல் 15 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் 614 ஆவின் பால் முகவர்கள் உள்ளனர். மொத்த விற்பனையாளர்கள் 25 பேர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் முகவர்கள் மூலம் 187 பாலகங்களும், 10 ஆவின் ஒன்றியப் பாலகங்களும், நிர்வாகம் நேரடியாக நடத்திவரும் ஒரு ஹைடெக் பாலகமும் செயல்பட்டுவருகின்றன.

 

தற்போது நாளொன்றுக்கு 1.66 லட்சம் லிட்டர் பால் சில்லரை விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. தினசரி பால் கொள்முதல் 15 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. இதன்மூலம் மாதம் 13 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தினசரி பால் விற்பனையை 2 லட்சம் லிட்டராக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த ஆண்டு பால் பொருட்கள் விற்பனை மாத சராசரி 1.80 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டு 2.20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பால் பொருட்கள் விற்பனையை 4 கோடி ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

சேலம் ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் யூ.ஹெச்.டி. பால், நறுமணப் பால் ஆகியவை சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

 

தமிழ்நாடு அரசு புதிதாக 500 ஆவின் பாலகங்கள் தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதில் சேலம் ஆவினுக்கு 35 பாலகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சேலம், மேட்டூர், வாழப்பாடி, ஆத்தூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் நவீன பாலகங்கள் அமைக்கப்பட்டு, விரைவில் அவை பயன்பாட்டிற்கு வர உள்ளன. 

 

சேலம் ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கால்நடைத் தீவனங்கள் விற்கப்படுகின்றன. மாதத்திற்கு சராசரியாக 1,600 டன் தீவனம் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்; இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
complaint against Rajendra Balaji Police investigation in the final stage

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது ஜாமீனில் உள்ளார். அதே சமயம் நல்லதம்பி என்பவர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடப்பதாகவும், அதனால் இதனை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (11.04.2024) நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் முகிலன், “இந்த வழக்கின் புலன்விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி நல்லதம்பியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.