Skip to main content

‘அப்பா நான் வீடியோல தெரியுறனா’ - நொடிப்பொழுதில் பறிபோன மகிழ்ச்சி; மனதைக் கணமாக்கும் சம்பவம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

குழந்தைகள் கண்முன்னேயே பெற்றோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர்கள் குளிப்பதற்கு முன்பு எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள குழந்தை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜனார்த்தனன் - பவித்ரா தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் ஒரு மகளும் உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு குடும்பத்துடன் சென்ற ஜனார்த்தனன், அங்கிருந்து மேலப்பாறை பகுதிக்கு சென்றுள்ளார்.

 

குழந்தைகள் இருவரையும் ஒரு பாறையில் அமர வைத்துவிட்டு மனைவியுடன் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளை நீர் குறைந்த அளவில் இருக்கும் பகுதியில் இறக்கி நீச்சல் அடிக்க விட்டு வீடியோவாக பதிவு செய்தார். அப்பொழுது அவரது குழந்தைகள் 'அப்பா நான் வீடியோவில் தெரிகிறேனா' என சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை பாறை மேல் மேலே அமர வைத்துவிட்டு ஜனார்த்தனன், பவித்ரா ஆகிய இருவரும் ஆற்றில் இறங்கி குளித்த பொழுது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அவர்களது அழுகுரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க ஆற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்கு முன்பாகவே ஜனார்த்தனனும் அவரது மனைவி பவித்ராவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவர்கள் ஆற்றில் குளிப்பதற்கு முன்னால் எடுத்த அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.