
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு கூடத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 380க்கு மேற்பட்ட மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியில் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கு இன்றைய மதிய உணவு வழக்கம்போல தயாராகிக் கொண்டிருந்தது. உணவினை சமையலர் ஜோதியம்மாள் செய்து கொண்டிருக்க, அவருக்கு உதவியாளராக லிங்கவாடி பகுதியைச் சேர்ந்த சரசு என்பவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த பொழுது சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் ஜோதியம்மாள் மற்றும் சரசு ஆகிரு வரும் காயமடைந்தனர். பயங்கர சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சத்துணவு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற சமையல் பொருட்களும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து அறிந்து வட்டாட்சியர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.