Skip to main content

கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு; ஆவடியில் சோகம்

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

 cylinder explosion in Avadi

 

ஆவடியில் வீட்டில் சமையல் கேஸ் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 cylinder explosion in Avadi

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கலைஞர் நகர் பகுதியில் சங்கர் ராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு சங்கர் ராஜின் தாய் ரோஜா சமைப்பதற்காக கேஸ் சிலிண்டர் பற்ற வைத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்துச் சிதறியது. சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.  வீட்டில் சிக்கிக்கொண்ட தாய் ரோஜா, மகன் சங்கர் ராஜ் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய் ரோஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது பிரதமர் தாய்மார்களுக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு' - தமிழிசை கருத்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
'This is the greatest gift the Prime Minister has given to mothers' - Tamil comments

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணத்திற்காக விலை குறைக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

nn

இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், '''வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு உஜ்வாலா என்ற இலவச கேஸ் இணைப்பு திட்டத்தை கொடுக்கும் பொழுது பிரதமர் மோடி சொன்னார் 'எனது தாய் கரி அடுப்பில் ஊதி ஊதி சமைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த புகையை தாய்மார்கள் உள்ளே இழுக்கும்போது ஏறக்குறைய 300 சிகரெட் புகைத்தால் நுரையீரலுக்கு எவ்வளவு கெடுதல் வருமோ அதே கெடுதல் இந்த புகை அடுப்பில் வருகிறது என்பதை கேள்விப்பட்டு தான் இந்த இலவச கேஸ் அடுப்பை கொடுக்கிறேன்' என்று சொன்னார். அதேபோல தான் இன்று விலை அதிகமாக இருப்பதால் பல குடும்பங்களுக்கு இது பிரச்சனையாக இருக்கிறது என்பதனால் ஒட்டு மொத்தமாக 100 ரூபாய் குறைந்திருப்பது என்பது உண்மையிலேயே மகளிர் தினத்தில் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பிரதமர் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு என்று தான் நான் நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

Next Story

பரிதாபமாகப் பலியான பிளம்பர்! - அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த சோகம்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Man passes away near avadi police investigation

சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். 49 வயதான இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உதவியாளராக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(48) என்பவர் வேலை செய்து வருகிறார். இருவருமே சுற்று வட்டாரப் பகுதிகளில் பிளம்பர் பணியைச் செய்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் பிளம்பிங் வேலை செய்வதற்காக ரமேஷை வேலைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து, அன்றைய தினமே ரமேஷ் தனது உதவியாளர் சுரேஷை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் சோழபுரம் நரேஷ் தெருவில் உள்ள அக்ஸயா அடுக்குமாடிக் குடியிருப்பில் பிளம்பிங் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு வேலைகளைச் செய்து கொண்டிருக்க, அடுக்குமாடிக் குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் வைத்திருந்த மின்மோட்டார் பழுதானது தெரியவந்துள்ளது. இதனை, தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடம் சொல்ல, அவர்கள் அதனைச் சரிசெய்ய வேண்டும் என சொல்லியதாகக் கூறப்படுகிறது. 

Man passes away near avadi police investigation

இதையடுத்து, கழிவுநீர் தொட்டியில் வைத்திருந்த மின்மோட்டாரை சரிசெய்ய சுரேஷ் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். அந்த சமயம் ரமேஷ் 'பிளம்பிங்' பொருட்கள் வாங்க சென்ற நிலையில், அதற்குள் சுரேஷ் மோட்டாரை சரி செய்து மீண்டும் தொட்டிக்குள் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக சுரேஷை விஷ வாயு தாக்க மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, 'பிளம்பிங்' பொருட்கள் வாங்கி வந்த ரமேஷ் தொட்டிக்குள் பார்த்தபோது சுரேஷ் மயக்க நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே, தொட்டிக்குள் இறங்கி சுரேஷை மீட்க முயற்சித்துள்ளார். அப்போது, அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி உள்ளார்.

இதையடுத்து, இருவரும் தொட்டிக்குள் சிக்கியதைக் கண்ட தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் திருமுல்லைவாயல் போலீஸார் கழிவுநீர் தொட்டியில் இறங்கி இருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், ரமேஷ் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரமேஷின் அண்ணன் ராஜேஷ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, திருமுல்லைவாயலில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த ஆணையர், ''விஷவாயு தாக்கிய தொட்டி சமையலறை, குளியலறை தண்ணீரை தேக்கி வைக்கும் தொட்டி. நடந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தார்.