'மாண்டஸ்' புயல் எதிரொலி - சீற்றத்துடன் காணப்படும் கடல்

Cyclone 'Montes' echoes - sea rage in coastal districts

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கில் 500 கிலோமீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 580 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வட தமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும்பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக மீனவர்களும்கடலுக்குச் செல்லவில்லை.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் மேலெழும் வகையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

Chennai Cuddalore Puducherry weather
இதையும் படியுங்கள்
Subscribe