Skip to main content

சைபர் க்ரைம்; விவசாயியின் ஒரு லட்சத்தை மீட்ட காவல்துறை! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Cyber ​​crime; Police rescue farmer's one lakh

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயாத்துரை மகன் பாலசுப்ரமணியன். இவருடைய செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க சம்மதம் தெரிவித்தால் அதற்கு அட்வான்ஸ் தொகையாக 20 லட்சமும் மாத வாடகை 25,000 ரூபாயும் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 


அதை நம்பிய பாலசுப்பிரமணியன், அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 1,14,999 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகும் அவர்கள் பாலசுப்பிரமணியனிடம் மேலும் மேலும் பணம் கேட்டுள்ளனர். அப்போது அவர், ‘என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. எனவே என்னிடத்தில் தங்கள் செல்போன் டவர் அமைக்க வேண்டாம். நான் செலுத்திய பணத்தை திருப்பித் தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். 


அதன் பிறகு அவர்கள் எந்த தகவலும் தராமல் பாலசுப்பிரமணியன் போனைத் துண்டித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். உடனடியாக அவர், விழுப்புரத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கூடுதல் எஸ்.பி கோவிந்தராஜன் மற்றும் போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வங்கி அதிகாரிகளின் துணையோடு உடனடியாக அந்த வங்கிக் கணக்கு முடக்கம் செய்தனர். அதன் பிறகு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பாலசுப்பிரமணியம் செலுத்திய 1,14,999 பணத்தை மீட்டு அவரது கணக்கில் வரவு வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பாராட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்