Skip to main content

“தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது” - சி.வி.சண்முகம்  

Published on 07/08/2022 | Edited on 07/08/2022

 

CV Shanmuagam condemn on DMK Government

 

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கீழணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி அளவிலான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே உள்ள தீவு கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 கிராமங்களை வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி. சண்முகம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அவருடன் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன், புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், அதிமுக அமைப்புச் செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்விராஜெயம் மற்றும் நிர்வாகிகள்  பலர் சென்றனர்.  திட்டுக்காட்டூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சி.வி.சண்முகம் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், “கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால் கொள்ளிடம்  ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை இல்லை. ஆனால் மழை இல்லாமலேயே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி, அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. வெள்ள பாதிப்பு, பள்ளி மாணவி மரணம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் இப்படி எந்த விஷயத்திலும் தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது.

 

பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் தூங்கி வழிகிறது. சிதம்பரம் பகுதியில் வெள்ளம் வடியவில்லை. புயல் பாதுகாப்பு மையத்தில் போதிய வசதி இல்லை. ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால் அங்கு மக்கள் எப்படி தங்குவார்கள். இதைக்கூட செய்யாமல் மாவட்ட நிர்வாகம் இருக்கிறது.

 

திமுக அமைச்சர் பாலத்தின் கரையிலேயே வந்து கரையிலேயே பார்த்து விட்டு செல்கிறார். இதுபோன்ற வெள்ள பாதிப்பை தடுக்கத்தான் அதிமுக ஆட்சியில் ரூ 500 கோடி செலவில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்டப்பட்டது. அந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு ஒரு தடுப்பணை கட்ட ஆய்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆற்றின் கரைகளை பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இப்போதாவது இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.