Skip to main content

ஓடும் லாரியில் தார்பாய்களை அறுத்து மதுபாட்டில் பெட்டிகள் திருட்டு

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Cut the tarpaulin on the moving truck and steal the boxes from the liquor store

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள ஹால்ஸ் மது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உற்பத்தியாகும் மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலையில் மதுபாட்டில் பெட்டிகள் ஏற்றப்பட்ட லாரியில் 3 தார்பாய்கள் போட்டு மூடி கயிறு கட்டப்பட்ட லாரி கந்தர்வக்கோட்டை கடந்து கோமாபுரம் அண்ணாநகர் வழியாக சென்றுகொண்டிருந்தது.

 

அப்போது லாரியிலிருந்து ஒரு பெட்டி மதுபாட்டில்கள் கீழே சாலையில் விழுந்து உடைந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியின் மேலே பார்த்தபோது ஒரு ஆள் மேலே நின்றிருக்கிறார். அதை லாரி ஓட்டுநரிடம் சொல்லி லாரியை நிறுத்துவதற்குள் மேலே இருந்த நபர் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி காரில் குதித்து தப்பிச் சென்றுள்ளனர். கந்தர்வக்கோட்டை பகுதியிலிருந்தே லாரியைக் கண்காணித்துக் கொண்டு பின்னால் ஆம்னி காரில் வந்த நபர்களில் ஓடும் லாரியில் கயிறு கட்டி மேலே ஏறிய ஒரு நபர் தார்பாய்களை கத்தியால் கிழித்து மதுபாட்டில் பெட்டிகளை தூக்கி ஆம்னி காரில் போட்டுள்ளார். 5 பெட்டிகளைத் தூக்கி காரில் வீசியதில் ஒரு பெட்டி மட்டும் கீழே விழுந்து உடைந்ததால் தான் பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஓடும் லாரியில் மதுபாட்டில் பெட்டிகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

அதே பகுதியை சே்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், “கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்பு இதே போல சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு லாரிகளில் பொருள் ஏற்றிச் சென்றால் ஏதாவது மரங்களில் இருந்து லாரியில் குதித்து பார்சல்களை தூக்கி வீசிக்கொண்டே போவார்கள். அதே கும்பலைச் சேர்ந்த சிலர் பின்னால் எடுத்துக் கொண்டு வருவார்கள். பின்னால் வரும் வாகன ஓட்டுநர்கள் சொன்னால் தான் திருட்டு நடப்பதே தெரியும். அதேபோல சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் சொகுசு பேருந்துகளில் வெளிநாட்டில் இருந்து ஊருக்குச் செல்வோரின் பார்சல்கள் பஸ் மேலே உள்ள கேரியரில் ஏற்றி தார்பாய் போடப்பட்டிருக்கும். ஆனால், இது போன்ற திருடர்கள் பஸ் நிற்கும் இடங்களில் மறைவாக மேலே ஏறி படுத்துக்கொண்டே தார்பாய்களை அறுத்து பார்சல்களை திருடிச் சென்றுவிடுவார்கள். இப்படி பறிகொடுத்தவர்கள் ஏராளமானோர் ஏமாற்றத்தோடு வீடு போவார்கள். அதன் பிறகுதான் பஸ்ஸில் கீழேயே பார்சல் ஏற்றும்படியாக வசதி செய்துள்ளனர். ஆனால், மதுபாட்டில் திருட்டில் பழைய முறையிலேயே திருடி இருக்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.