Skip to main content

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெட்டுக்குத்து! -எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய ஆளும்கட்சியினர்!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
viru

 

“நாளை ஜூலை 15, காமராஜருக்கு  116-வது பிறந்தநாள். விருதுநகர் அவர் பிறந்த ஊருல்ல..  இன்னைக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விருதுநகருக்கு வந்து கனவு ஆசிரியர் விருது, புதுமைப்பள்ளி விருதெல்லாம் கொடுத்திருக்காரு. நாளைக்கு நாடார் மகாஜனசங்கம் இங்கே கல்வித்திருவிழா நடத்துது. முதலமைச்சர் எடப்பாடி வர்றாரு.  முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், பழ.நெடுமாறன் போன்றவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதெல்லாம் தரப்போறாங்க. ஆனா.. இன்னைக்கு..” என்று இழுத்த அந்த அதிமுக நிர்வாகி “முதலமைச்சர் வர்ற நேரத்துலயா இந்த மாவட்டத்துல வெட்டுக்குத்தெல்லாம் நடக்கணும்?” என்று வேதனைப்பட்டார். 

 

வெட்டுப்பட்டது யார்?

ஸ்ரீவில்லிபுத்தூர் – மம்சாபுரத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில், விதிமீறலாக மணல் அள்ளுவதெல்லாம் சர்வசாதாரணமாக நடப்பதுதான். இந்த வேலையை கடந்த சில வருடங்களாக மிரட்டலாக செய்து வருகிறார் அய்யனார். இவர், மம்சாபுரம் அதிமுக நகர செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் அரசு உதவி வழக்கறிஞரும் ஆவார். இன்னொரு வழக்கறிஞரான கணபதி, கோர்ட் நடவடிக்கைகளில் அய்யனாருக்கு உதவினார். ஒருகட்டத்தில் இருவருக்கும் பிடிக்காமல் போனது. டிடிவி தினகரனின் அமமுக பக்கம் சென்றார் கணபதி. இந்தநிலையில், மணல் திருட்டில் இருதரப்பினரும் போட்டாபோட்டி போட்டார்கள். அடித்துக் கொண்டார்கள்   இதனால் விரோதம் வளர்ந்தது. 

 

vett

 

இன்று மலையடிவாரத்தில் அய்யனார் ஆட்கள்  மணல் அள்ளியபோது, கணபதி தரப்பினர் வீடியோ எடுத்திருக்கின்றனர். அப்போது அய்யனார் அங்கு வர,  மூன்றுபேர் கொண்ட கும்பல்,  அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடியது.  தலையில் வெட்டுப்பட்ட அய்யனாரை உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

விருதுநகர் மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிக்கு, மாவட்டம் முழுவதும் மணல் அள்ளுபவர்களிடமிருந்து  மாமூல் போய்விடுகிறது.  வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என அனைத்து அரசுத்துறையினரும் அய்யனார் செய்துவரும் மணல் திருட்டுக்கு துணை போயிருக்கின்றனர். 

 

eda

 

விருதுநகர் மாவட்டத்தில், அரசு இயந்திரம் இந்த அளவுக்கு துருப்பிடித்துப் போயிருக்கும் நிலையில்தான், கல்வித்திருவிழாவில் கலந்துகொள்ள நாளை விருதுநகர் வருகிறார் முதல்வர். இந்தநேரத்தில்,   ஆளும்கட்சி ந.செ.  வெட்டுப்பட்டது, எடப்பாடியை  டென்ஷன் ஆக்கியிருக்கிறது.  


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.