Skip to main content

சென்னையில் கஞ்சா விற்பனையை காட்டிக்கொடுத்தவருக்கு அரிவாள் வெட்டு!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கஞ்சா கும்பல் அரிவாளால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் இருவரையும் மீட்டு அப்பகுதி மக்களும் நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களும், திருவேற்காடு நகரப் பொறுப்பாளர்களும் இணைந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர். 

 

attack


சென்னையை அடுத்த திருவேற்காடு, மேல்அயனம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (31), இவர், நாம் தமிழர் கட்சியின் திருவேற்காடு கிழக்கு பகுதி செயலாளராக உள்ளார். நேற்று  27-04-2019 இரவு 9 மணியளவில் வீட்டின் அருகில் நின்றுக்கொண்டிருந்த இவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர். அதனால்,  இவரின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க சுதாகர் முயன்றார். இந்தச் சமயத்தில், வீட்டிலிருந்து வெளியில் வந்த சுதாகரின் அம்மா ராணி, மகனை மர்ம கும்பலிடமிருந்து காப்பாற்ற முயன்றார். இதில் ராணிக்கு தலையில் வெட்டு விழுந்தது.

தாய், மகனை வெட்டிய கும்பலைப் பிடிக்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முயன்றனர். இதனால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. வெட்டுக் காயமடைந்த சுதாகரையும் ராணியையும் மீட்ட பொதுமக்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக இருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருவேற்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சுதாகரிடமும் ராணியிடமும் காவல்துறையினர் என்ன நடந்தது என்று விசாரித்து, அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``மேல்அயனம்பாக்கம், ராஜீவ் காந்தி நகரைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் அருகில் முட்புதர்கள் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. இதுகுறித்து சுதாகர், திருவேற்காடு காவல் நிலையத்தில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை ரகசியமாகத் தெரிவித்துவந்தார். அதன்பேரில், காவல்துறையினர் கஞ்சா கும்பலை கைதுசெய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்கும் கும்பல்தான் சுதாகரைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளனர். நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். ஆனால், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த சுதாகர் குறித்து, எப்படி கஞ்சா விற்கும் கும்பலுக்கு தகவல் தெரிந்தது என்று தெரியவில்லை. காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம்தான் இந்தத் தகவல் கஞ்சா விற்கும் கும்பலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. சுதாகர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், கஞ்சா விற்கும் கும்பல் குறித்து இனிமேல் யாரும் தகவல் தெரிவிக்கத் தயங்குவார்கள். மேலும், கஞ்சா விற்பனையால் எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கஞ்சா விற்கும் கும்பலின் பிடியிலிருந்து எங்கள் பகுதியை மீட்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ``சுதாகர், ராணி ஆகியோரை வெட்டியவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே கஞ்சா விற்ற சிலரைக் கைதுசெய்துள்ளோம். அவர்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் சுதாகர், ராணியை வெட்டியவர்களைக் கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.

கஞ்சா விற்பனைகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த சுதாகர் மற்றும் அவரின் அம்மாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம், திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது