Skip to main content

‘கோவிலில் ஆண்டியும் அரசனும் ஒன்றல்லவா?’ -கேள்வி கேட்கும் விருதுநகர்!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020

“குடும்பத்தோடு கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டது  ஒரு தப்பா?” -விருதுநகர் தொழிலதிபர் ஒருவர் கேட்கும் இந்தக் கேள்விக்கு “ஆமா..தப்புத்தான்..” என்கிறார்கள், அந்த ஊர் பிரமுகர்கள் சிலர்.

“இது தனிநபர் சார்ந்த பிரச்சனை அல்ல.. ஊரடங்கு மீறல் விவகாரம்..” என்று கூறினார்,  விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் 14 பேரில் ஒருவர்.  

 

  curfew - Virudhunagar Temple issue



விவகாரம் இதுதான் -

விருதுநகர் மாரியம்மன் பொங்கல் என்பது தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவிழா ஆகும். ஊரடங்கினால், இவ்விழா சம்பிரதாயமாக நடந்து முடிந்தது. ஆனால், தெய்வ சன்னதியில் ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் சமம் என்ற ஆன்மீக கோட்பாடு, இங்கே மீறப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனும்கூட இவ்விழாவில் பங்கேற்பதில் முதலில் ஆர்வம் காட்டினார். பிறகு,  ஊரடங்கு உத்தரவை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கோவில் பக்கமே அவர் வரவில்லை. ஆனால், தொழிலதிபர் முரளிக்கும்  அவரது நண்பரான காவல்துறை அதிகாரிக்கும், பொங்கல் விழாவின்போது கோவில் கதவுகள் திறந்திருக்கிறது. இத்தனைக்கும் முரளி, மாரியம்மன் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கூட இல்லை. ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவை, தாங்கள் வழிபட்டு வந்த மாரியம்மனை, தரிசிக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்ற நிலையில், பணபலமும் அதிகார பலமும் கைகோர்த்து, கோவிலுக்குள் சென்றதை, ஊர்மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஆத்திரத்தை வாட்ஸ்-ஆப் மூலம் பரப்பி, விருதுநகரை சிலர் தகிக்க வைக்கின்றனர்.

 

nakkheeran app


 

  curfew - Virudhunagar Temple issue



நாம் தொழிலதிபர் முரளியிடம் பேசினோம்.

“தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் சாமி கும்பிட அழைத்தார். நான் வருவது சரியாக இருக்குமா? என்று கேட்டேன். கூட்டமாகத்தான் வரக்கூடாது, ஒருவர் ஒருவராக வரலாம் என்றார். என் மனைவியுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டேன். சிலர் சொல்வதுபோல், காவல்துறை அதிகாரி யாரும் என்னோடு கோவிலுக்கு வரவில்லை. என்னை சம்பந்தப்படுத்தி ஊருக்குள் பரபரப்பு ஏற்படுத்துவதை சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.  பொது விஷயத்தில், குறிப்பாக பொருட்காட்சி நடந்தபோதெல்லாம், கொள்ளை லாபம் பார்த்த ஒருவரது மோசடித்தனம் கண்டுபிடிக்கப்பட்டதால், அவருடைய பிழைப்புக்கு வழியில்லாமல் போனது.  ‘உன்னை என்ன செய்கிறேன் பார்..’ என்று சவால் விட்டார். எனக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, எனது அலுவலகம் வரை சிலர் மூக்கை நுழைக்கின்றனர். நான் பொதுநலத்தோடு செயல்படுகிறேன். எனக்கெதிரான அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுயநலம் மட்டுமே உண்டு.” என்றார் வேதனையுடன்.  

 

  curfew - Virudhunagar Temple issue



தனிப்பட்ட விஷயத்தை பொது விவகாரம் ஆக்கி,  ‘கோவிலில் வர்க்க பேதம்’ என்று பக்தர்களின் பெயரால் ஊரை உசுப்பேற்றுவதெல்லாம்,  ஒரு தினுசான அரசியலாக அல்லவா இருக்கிறது!    

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.