Skip to main content

சுவிட்சர்லாந்தில் காதல்! கடலூரில் திருமணம்! தமிழ்நாட்டு மருமகளான லண்டன் பெண்!  

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Cuddalore youngster married Landon girl

 

கடலூர் உண்ணமலைசெட்டி சாவடி, பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருடைய மகன் ரஞ்சித். இன்ஜினியரிங் படித்த இவர், கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த அன்னா லூய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார். அப்போது ரஞ்சித்துக்கும், அன்னா லூய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் காதலாக மாறியது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

 

இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டியதையடுத்து, நேற்று கடலூர் அருகேயுள்ள திருவந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னா லூய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

 

Cuddalore youngster married Landon girl

 

ஆங்கிலேய கலாச்சாரத்தில் வளர்ந்த அண்ணா லூய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் தமிழ் பெண்ணாக மணமேடைக்கு வந்து அமர்ந்தார்.  அதேபோல் பட்டு வேட்டி பட்டுச் சட்டை அணிந்து மணமகன் ரஞ்சித்தும் மண மேடையில் அமர்ந்தார். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமகள் கழுத்தில் தாலி கட்டினார் ரஞ்சித். அப்பொழுது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். பெண்ணின் உறவினர்களும் வேட்டி, சேலை எனத் திருமணத்தில் அசத்தினர். 

 

ஆங்கிலேயப் பெண்ணுக்கு தமிழ் முறைப்படி, தமிழ் இளைஞருடன் நடைபெற்ற திருமணம் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்