Skip to main content

ஏமாற்ற நினைத்த காதலனை காவல்துறை உதவியுடன் கரம்பிடித்த இளம் பெண்! இரவில் நடந்த திருமணம்! 

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

Cuddalore young man who said no to girl friend and police involved in this mater

 

கடலூர் மாவட்டம், சின்னாத்துக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் சுகுணா (26). அரியலூர் மாவட்டம், பெரிய ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்த மாயவேல் என்பவரின் மகன் மணிவேல் (27). சுகுணா, டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்துவருகிறார். மணிவேல், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்துவந்துள்ளனர். 

 

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக சென்னைக்குச் செல்லாமல் தங்கள் ஊரிலேயே வசித்துவந்துள்ளனர். அதேசமயம் மணிவேல், சுகுணாவிடம் திருமண ஆசை வார்த்தைகளைக் கூறி பலமுறை தனிமையில் இருந்துவந்துள்ளார். 

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிவேலுக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மணிவேலின் பெற்றோர் செய்துவந்தனர். இதுபற்றி அறிந்த சுகுணா, நடந்த சம்பவங்கள் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பெற்றோருடன் மணிவேலுவின் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மணிவேல் மறுத்துள்ளார். 

 

இதையடுத்து சுகுணா, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (16.08.2010) புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது மணிவேலுவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் காதலித்ததையும் பழகியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார், அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து  திருமணம் செய்துவைக்க ஆலோசனை அளித்தனர்.

 

அதன்படி உடனடியாக நேற்று இரவு 8.30 மணியளவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே, எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ள வண்ணமுத்துமாரியம்மன் கோயிலில் இரு வீட்டார் சம்மதத்துடன் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி, திருமணம் செய்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்