Skip to main content

மூன்று தலைமுறையாக பன்னாட்டு நாணயங்களை சேகரித்து வரும் குடும்பம்!  

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மாரியம்மாள். இவருடைய தாத்தா வைத்திலிங்கம் என்பவர் 1853 ஆம் ஆண்டிலிருந்து அரசர்கள், ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்துள்ளார். அவர் இறந்த பின்பு தனது மகனான கோவிந்தராஜிடம் தான் சேகரித்த நாணயங்களை ஒப்படைத்துள்ளார். தந்தையின் வழியை பின்பற்றிய கோவிந்தாராஜ், வெளிநாட்டிற்கு வேலை செல்லும் போது கிடைக்கும் அயல்நாட்டின் நாணயங்களையும் சேகரிக்க தொடங்கியுள்ளார். அவரது மறைவுக்கு பின் அவரது பிள்ளைகள் பல்வேறு நாடுகளின் பாரம்பரியம் மிக்க நாணயங்களை சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். 

 

cuddalore virudhachchalam family that has been collecting multinational coins for three generations

 

 

இதில் கி.பி 1717 ஆம் ஆண்டு முகலாய பேரரசின் பணத்தை நாணயம் ஆக்குவதற்கு அனுமதி பெற்று, அதற்கான நாணய சட்டத்தை ஆங்கிலேயர் அமல்படுத்தினர். அக்கால அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நாணயம் முதல் 300 ஆண்டுகள் கடந்து, தற்போது வரை உள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு நாணயங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். இந்தியாவில் கி.பி 1835 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு பக்கம் கிழக்கிந்திய கம்பெனி என்று முத்திரை பதித்தும், மறுபக்கம் ராணி விக்டோரியா முகம் பதித்து வெளியான 14 நாணயங்களில் ஒன்று இக்குடும்பத்தினரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இந்தியாவில் கி.பி 1903 முதல் 1936 வரை அச்சடிக்கப்பட்ட  ஆங்கிலேயர்களான ஜார்னஜ், மற்றும் ஐந்தாம் ஜார்ஜ் வரை முகம் பதித்த முத்திரை நாணயங்களும் உள்ளன.  

 

cuddalore virudhachchalam family that has been collecting multinational coins for three generations

 

மேலும் ராமர் பட்டாபிஷேகம் செய்யும் நாணயம், ஒட்டை வடிவில் உருவாக்கப்பட்ட நாணயங்கள், இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட நாணயங்கள், தாமரை, சூரியன், மகாத்மா காந்தி உள்ளிட்ட உருவங்கள் இடம் பெற்றுள்ள ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 10, 20 ரூபாய் நாணயங்கள் வரை சேகரித்து வைத்துள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட 20 வெளிநாடுகளில் உள்ள பழமை வாய்ந்த நாணயங்களும், உலகில் மிக சிறந்த தலைவர்கள் என போற்றப்படும் ஆபிராகாம் லிங்கன், எலிசபெத், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் முகங்கள் பொறித்த நாணயங்களும் சேகரித்து வைத்திருப்பது காண்போரை வியப்படைய செய்கிறது. 

 

 

cuddalore virudhachchalam family that has been collecting multinational coins for three generations

 


இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாணயங்கள் செப்பு மற்றும் பித்தளை கொண்டு செய்யப்பட்டதாகவும் நாணயங்களின் காலம் மற்றும் மதிப்புகளை பொறுத்து சிறிய மற்றும் பெரிய வட்ட வடிவில் மில்லி மீட்டர் கிராம் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் வெளி நாட்டு நாணயங்கள் சில்வர் உள்ளிட்ட உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


கடந்த 17- ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு அரசர்கள், தலைவர்களால் உருவாக்கப்பட்ட நாணயங்களின் வயது மற்றும் அதனுடைய வடிவமைப்பு உள்ளிட்டவைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் தொன்று தொட்டு தங்கள் குடும்பத்தினர் நாணய சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என்று அக்குடும்பத்தினர் தெரிவித்தன்ர். இந்நாணயங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள அரசு ஒத்துழைப்பு நல்கினால் பார்வைக்காக வைப்பதாக தெரிவித்தனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.