Skip to main content

வகுப்பறை இடிப்பு; பொதுமக்கள் சாலை மறியல் 

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

cuddalore virudhachalam nearest panchayat elementary school issue

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், இப்பள்ளி வளாகத்தில் இருந்த பழைய வகுப்பறை கட்டடங்களை இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டடம் கட்டப் போவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழைய பள்ளிக் கட்டடத்தை இடித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடக்கப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவ மாணவிகள் போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லாததால் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள நடுநிலைப் பள்ளிக்குச் சென்று பயிலக் கூடிய அவல நிலை இருந்து வருகிறது.

 

இந்நிலையில் வண்ணாங்குடிகாடு கிராமத்தின் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி, தன்னிச்சையாக செயல்பட்டு புதிய பள்ளிக்கூடம் கட்டுவதாகக் கூறப்பட்ட பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கிராம மக்கள், மாணவர்களின் நலனுக்காக பள்ளி கட்டடங்கள் கட்டக் கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதில் தீவிரமாக இருந்துள்ளது. அதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து,  வண்ணாங்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள், கையில் பதாகைகளை ஏந்தி விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மறியல் போராட்டத்தின் போது ஏற்கனவே தங்களது கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள நிலையில் எதற்காக புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வேண்டும் என்றும்,  போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் அவதி அடைந்து வரும் நிலையில், புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும், அலட்சியமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலையில் படுத்துக் கொண்டும், மரத்தை வெட்டி சாலை நடுவே குறுக்கே போட்டுக் கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்றத் தலைவர் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றதால்,  விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி  அலுவலர், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியை நிறுத்துவதாகக் கூறிய பின்பு சாலை மறியலைக் கைவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.