Skip to main content

போலி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி; கடலூரில் பரபரப்பு!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

cuddalore virudhachalam fake company created incident 

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் ஜெட்வே இந்தியா என்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பெண்களை மட்டுமே தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குவைத் நாட்டில் டிரைவர், பிட்டர், செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதாக கூறி மாவட்டம் முழுவதும் நோட்டீஸ் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

 

இதனை நம்பி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தில் தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்களை கொடுத்துள்ளனர். அதையடுத்து ஒவ்வொரு நபர்களிடமும் தலா 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்ற டிராவல்ஸ் நிறுவனம் பணம் கட்டியவர்களிடம் போலியான விசா தயாரித்து, அவர்களது செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்ட விசாவை ஆன்லைன் மூலமாக பரிசோதித்துப் பார்த்தபோது சரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், வெளிநாடு செல்ல பணம் கொடுத்தவர்களுக்கு ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 13 தேதிகள் என இரண்டு பிரிவாக விமான டிக்கெட் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசா, டிக்கெட் வாங்குவதற்காக விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் ஜெட்வே இந்தியா நிறுவன அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் பணம் கொடுத்த அனைவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிறுவனம் சுமார் 150 பேரிடம் 1 கோடிக்கு மேல் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

 

cuddalore virudhachalam fake company created incident 

 

இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவனத்திற்கு வாடகை விட்ட கட்டட உரிமையாளர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, தாமு மற்றும் ராஜீ என்ற இரண்டு நபர்கள் தான் கட்டடத்தை வாடகைக்கு கேட்டதாகவும், முன்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், மீதமுள்ள முன்தொகை பணமான 20 ஆயிரம் ரூபாயை வாடகை தரும் போது தருவதாகக் கூறியதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் கூறினார். பொதுமக்கள் அதிகளவில் புழங்கக்கூடிய இடத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தைப் பற்றி உளவுத்துறையோ, உள்ளூர் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ தொழிலாளர்கள் அமைப்போ கண்டுகொள்ளாமல் கோட்டை விட்டதன் விளைவாக கோடிக்கணக்கில் ஒரே மாதத்தில் கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் சென்ற கும்பலால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

cuddalore virudhachalam fake company created incident 

 

அதேபோல் நூதன முறையில் பெண்களை வைத்து ஆசையாகப் பேசி ஒவ்வொரு நபர்களையும் ஏமாற்றி போலியான ஆவணங்கள், போலியான விசாக்கள் கொடுத்து ஒரு மாதத்திற்குள் அனைவரையும் ஏமாற்றிவிட்டுச் சென்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கண்டறிந்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை மாவட்டம் முழுவதும் லைசென்ஸ் இல்லாமல் இயங்கக்கூடிய டிராவல்ஸ் நிறுவனங்களை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், வெளிநாட்டுக்கு செல்ல துடிக்கும் இளைஞர்களை ஏமாற்றும் சம்பவம் நடைபெறக் கூடாது எனவும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.