Skip to main content

பெரியவர்கள் கூறியதை மீறி ஏரியில் குளித்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

 

Cuddalore two children incident


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள காஞ்சிராங்குளம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகள் மனிஷா(12). அதே கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் மேகலா(12). இவர்கள் இருவரும் அருகில் உள்ள கிராமத்தில், அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். தோழிகளான இவர்களிருவரும் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் விளையாடச் சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகள் இருவரையும் பல இடங்களில் தேடினர். 

 

இந்நிலையில் வீட்டிலிருந்து விளையாடச் சென்ற சிறுமிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள காஞ்சராங்குளம் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் 'கடந்த சில தினங்களாக மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் அதிகமாக உள்ளது, குளிக்கக்கூடாது' எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனையும் மீறி அவர்கள் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியில் அதிக அளவில் மணல் எடுத்து, ஆழப்படுத்தி இருந்ததால், ஆழம் தெரியாமல் சிறுமிகள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் உடனடியாக ஓடோடி வந்து ஏரிக்குள் குதித்து சிறுமிகளைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் சிறுமிகள் இருவரும் இறந்துவிட்டனர். பின்னர் மணிஷா, மேகலா ஆகியோரது உடல்களை மீட்டனர்.

 

இத்தகவல் பிள்ளைகளை தேடி வந்த பெற்றோருக்குத் தெரிய வந்து உடனடியாக அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.

 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுபாக்கம் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்த இரண்டு சிறுமிகளின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "2 சிறுமிகள் உயிரிழந்த இந்த ஏரியில் முறையான குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்றும், அளவுக்கதிமாக பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்படுவதால், ஏரிக்குள் இறங்குபவர்கள் எந்தப் பகுதி ஆழம் மிகுந்த பகுதி, எந்தப் பகுதி ஆழம் குறைவான பகுதி என்று தெரியாமல் ஏரியில் இறங்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது". என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும், "இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம்" எனக் குற்றம் சாட்டுகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.