Skip to main content

கரோனா! குணமாகாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்ட முதியவர் உயிரிழந்ததால் மக்கள் அச்சம்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
 corona

 

 

கடலூரை அடுத்த கோண்டூர் ஊராட்சிக்குட்பட்ட ஜோதி நகரைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் கடந்த 20-ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரிடமிருந்து உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

 

இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 

 

ஆனாலும் தொடர் சிகிச்சைக்கான வசதி இல்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பட்டு அங்கும் போதுமான வசதிகள் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 24-ஆம் தேதி அங்கு சேர்க்கப்பட்ட அவருக்கு 26-ஆம் தேதி வரை அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 28-ஆம் தேதி மாலையும் சற்று மூச்சுத்திணறல் இருந்த நிலையில், அவருக்கு கரோனா முழுமையாக குணமடைந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பினர். அனுப்பும்போது வாகனம் கூட ஏற்பாடு செய்யாததால் மேல் மாடியிலிருந்து நடந்தே கீழே வந்து வாடகை வாகனம் மூலம் வீட்டுக்கு வந்துள்ளார். 

 

இந்நிலையில் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் அதிகமாக ஏற்பட்டதையடுத்து அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த முதியவரின் குடும்பத்தினர்கள் கடலூர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முதியவர் பூரணமாக குணமடைவதற்கு முன்பு மருத்துவ மனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதால்தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு காரணம் ஏதாவது உண்டா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

இதனிடையே 28-ஆம் தேதி இரவு உயிரிழந்தவரின் சடலம் 29-ஆம் தேதி காலை 10 மணி வரை பாதுகாப்பாக மூடி வைக்கவும் இல்லை, அடக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லை என புகார் கூறும் அப்பகுதி மக்கள் இதனால் தொற்று பரவும் என அச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.