Skip to main content

டாஸ்மாக்கால் தடைபடும் திருமணம்; வேதனையில் தந்தை 

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

cuddalore srimushnam tasmac shop son and dad incident 

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிய நிலையில் தனது மூத்த மகன் சக்திவேலுக்கு திருமணம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வரன் தேடி வந்துள்ளார். அதேசமயம், சுப்பிரமணிக்குச் சொந்தமாக ஸ்ரீமுஷ்ணம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில்  கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு டாஸ்மாக் கடை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சக்திவேலுக்கு பெண் கொடுக்க பலர் முன் வந்த போதிலும், அவரது வீட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்றச் சொல்லி பெண் வீட்டார் நிபந்தனை விதித்துள்ளனர்.

 

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சுப்பிரமணி தனக்குச் சொந்தமான இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அதிகாரிகள் இவரின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இதனால் பொறுமை இழந்த சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டவர்களுடன் நேற்று காலை  டாஸ்மாக் கடை முன்பு திரண்டுள்ளார். அப்போது அவர்கள் தயாராக வைத்திருந்த சமையல் பாத்திரங்கள், பாய் தலையணை ஆகியவற்றை கடை முன்பு விரித்து படுத்துக் கொண்டனர். அங்கிருந்த பெண்கள் கடை முன்பு சமையல் செய்தனர். மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறப்பதற்கு வந்தனர். இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஊழியர்கள், உடனே கடையைத் திறக்க வேண்டும் இடத்தை காலி செய்யுங்கள் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கேட்க சுப்பிரமணி மற்றும் அவரது உறவினர்கள் கடையை காலி செய்யுங்கள் என்று கூற இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் விரைந்து வந்த போலீசார், சுப்பிரமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுப்பிரமணி, எனது இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் அவமானமாக கருதி என் மகனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் கடையை உடனே காலி செய்ய வேண்டும் என்று கறாராகக் கூறினார். உடனே அங்கிருந்தபடியே டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியன் என்பவரிடம் இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து எடுத்துக் கூறினார். அப்போது டாஸ்மாக் மேலாளர் விரைவில் கடையை காலி செய்வதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட சுப்பிரமணி, டாஸ்மாக் மேலாளர் கூறுவதை நம்ப முடியாது. இப்போதே  கடையை காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  உடனே டாஸ்மாக் மேலாளர் சுப்பிரமணியன் கடையின் உரிமையாளர் சுப்பிரமணியிடம் செல்போனில் பேசினார். அப்போது 10 நாட்களுக்குள் கடையை காலி செய்வதாக மேலாளர் கூற இப்படித்தான் இரண்டு ஆண்டுகளாக கடையை காலி செய்வதாக கூறிக் கொண்டிருக்கிறார்கள் காலி செய்யவில்லை. ஒன்று செய்யுங்கள் இன்றே கடையை காலி செய்யுங்கள் இல்லையென்றால் என் மகனுக்கு திருமணம் செய்ய நீங்கள் பெண் கொடுங்கள். டாஸ்மாக் கடை எனது இடத்தில் இருப்பதால் யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் இதுதான் தீர்வு என்று விவசாயி சுப்பிரமணி கூற., அதைக் கேட்டு டாஸ்மாக் மேலாளரும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.