Skip to main content

கஞ்சா கடத்தல்... ஐவர் கைது... 

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
police

 

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காராமணிக்குப்பம் சந்தை அருகே சிலர் கஞ்சா விற்பதாக பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு டூவீலரில் கையில் பெட்டியுடன் நின்றிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பெட்டியில் கஞ்சா இருந்ததை கையும் களவுமாக கண்டுபிடித்தனர்.

 

அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில், கடலூர் கேன் பேட்டைக்கு போலீசார் சென்று, அங்கு கஞ்சா வைத்திருந்தவர்களை கைது செய்தனர். மதுரையில் இருந்து கடலூர் கே. என். பேட்டைக்கு வந்து தங்கியுள்ள வேல்முருகன் என்பவர் கஞ்சாவை மொத்தமாக வெளியில் இருந்து வரவழைத்து கே. என். பேட்டையிலிருந்து கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி போன்ற மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது.

 

போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கடலூர் கே. என். பேட்டையை சேர்ந்த வேல்முருகன், திருப்பாப்புலியூர் முனுசாமி, நெல்லிக்குப்பம் அருகிலுள்ள பில்லாலி தொட்டியை சேர்ந்த பிரதீப், ஆனந்தராஜ், விமல்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா, 1,12,000 ரூபாய் பணம், 5 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

 

இதுகுறித்து பண்ருட்டி எஸ்.பி. பாபு பிரசாந்த், கைது செய்யப்பட்டவர்களிடம் கஞ்சா விற்பனையில் இன்னும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, வேறு எங்காவது கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் மூலம் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா வியாபாரம் ரகசியமாக கொடிகட்டி பறந்து வருகின்றது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.