Skip to main content

கலவரம் மூண்ட கடலூர்... இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Cuddalore riots ... clash between fishermen on both sides

 

சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதால் மீன் வளம் குறைகிறது என்பதால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி காலம் தொடங்கும்போது சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி மீனவர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். இன்னொரு பக்கம் மற்றொரு பகுதி மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று போராட்டங்கள் நடத்துகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலால் படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மீன்பிடி வலைகள் கொளுத்தப்பட்டன. இருதரப்பு மீனவர்களிடையே பயங்கரமான கலவரம் மூண்டது.

 

இந்நிலையில் இந்த ஆண்டும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி ஒரு தரப்பு மீனவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், மற்றொரு தரப்பு மீனவர்கள் சுருக்குமடி வலையை அனுமதிக்க கூடாது என்று போராடுகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க கோரி உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று (19.07.2021) தேவனாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மீனவ பெண்கள் 250 பேர், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கடலில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுப்பதற்காக தேவனாம்பட்டினம் கிராமத்திலிருந்து புறப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை கடலூர், வன்னியர்பாளையம் அருகே  தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ‘மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திக்க 5 பேர் மட்டும் செல்ல வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று கூறி அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

 

Cuddalore riots ... clash between fishermen on both sides

 

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வேறு வழியில் சென்ற மீனவப்பெண்கள் கடலூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவப் பெண்களிடம் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கடலூர் வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சமரசம் ஏற்படவில்லை. 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொதுமக்கள் அனைவரும் மாற்றுப்பாதையில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இரவு 11 மணிவரை நீடித்த போராட்டம் அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

 

ஒரே பகுதியில் இரு தரப்பு மீனவர்களிடையே சுருக்குமடி பயன்படுத்துவதில் தொடர்ந்து பிரச்சனைகள், போராட்டங்கள் நடைபெற்று வருவதால் கடலோர பகுதிகளில், மீனவ கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலோர பகுதிகளில், மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.