Skip to main content

சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவர்கள் தப்பிச் சென்றதால் பதற்றம்!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Cuddalore Reform School children escape in the middle of the night

 

நேற்று முன்தினம் நள்ளிரவு (22.03.2023) கடலூர் டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை ரயில்வே கேட்டில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது சந்தேகப்படும்படி இரு சிறுவர்கள் அந்த வழியாகச் சென்றனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சிறுவர் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பி வருவதும், அவர்களுடன் சேர்ந்து மொத்தம் 6 பேர் வேப்ப மரத்தில் ஏறி மதில் சுவர் வழியாக குதித்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த டி.எஸ்.பி உடனடியாக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றார். அப்போதுதான் அங்கிருந்து சிறுவர்கள் தப்பிய விவரம் இல்லத்தின் இரவு காவலருக்கு தெரியவந்தது. 

 

கடலூர் அடுத்த எஸ்.என்.சாவடி கெடிலம் ஆற்றுச்சாலையில் உள்ள அந்த அரசு சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் (சிறார் கூர்நோக்கு இல்லம்) குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு உட்பட்ட 13 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பிறகு சிறுவர்களை அறையில் தங்க வைத்துவிட்டு வார்டன் சிவா இரவு காவல் பணியில் இருந்தார். அனைவரும் தூங்கிய பிறகு திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, கடலூர் கூத்தப்பாக்கம் , சிதம்பரம் அடுத்த கிள்ளை, திருவண்ணாமலை உசம்பாடி, சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 17 வயதுடைய 6 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனிடையே சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய கிள்ளை மற்றும் திட்டக்குடி ஆவினங்குடியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கிள்ளை அருகில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் சிக்கினர். இதுகுறித்து சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் கணபதி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர். தப்பி ஓடிய 6 பேரில் நான்கு பேர் பிடிபட்ட நிலையில் கூத்தப்பாக்கம் மற்றும் திருவண்ணாமலை சேர்ந்த இரு சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சீர்திருத்த பள்ளியில் உயரமான மதில் சுவர்கள், பாதுகாப்பான இரும்பு கேட்டுகள் இருந்தும் பாதுகாவலர்களின் கண்காணிப்பு குறைபாடு காரணமாக அடிக்கடி அங்கிருந்து சிறுவர்கள் தப்பிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

 

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் குண்டலிப்புலியூரில் உள்ள 'நல்ல சமேரியர் சாரிடபிள் டிரஸ்ட்' சார்பில் இயங்கி வந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர் மற்றும் கோட்டக்குப்பம் கிளை காப்பகத்திலிருந்த 25 பேர் என மொத்தம் 167 பேர் மீட்கப்பட்டு கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர். கடலூர் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் 'கருணா மனநலக் காப்பகம்', மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் உள்ள 'டாக்டர் தவராஜ் மனநலக் காப்பகம்' ஆகிய இரு இடங்களில் 23 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

 

கடந்த மாதம் 21ஆம் தேதி நள்ளிரவு புதுப்பாளையம் காப்பகத்தில் தங்கி இருந்த 4 பேர் கதவை உடைத்து ஜன்னல் வழியாக போர்வையை கட்டி அதன் வழியாக தப்பினர். இதில் ஒருவர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். இருவர் சொந்த ஊருக்கு சென்றனர். ஒருவர் என்னவானார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து காப்பகத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புதுப்பாளையம் காப்பகத்தில் இரவு காவலாளிகள் தனி அறையில் தூங்கினர். அப்போது குண்டலிப்புலியூர் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன்(34), கிருஷ்ணகிரியை சேர்ந்த அஸ்லாம்(44), கொல்கத்தாவை சேர்ந்த சோனா மகதூர்(28), கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா(35), திருநெல்வேலி மனோஜ்(25) ஆகியோர் தப்பிச் சென்றனர். முதல் தளத்தில் தங்கி இருந்த அவர்கள் அறையின் கதவை உடைத்து போர்வைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காப்பகத்தின் காவலாளிகள் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் காப்பகத்தில் விசாரணை நடத்தி, தப்பியவர்களை தேடி வருகின்றனர். கடலூர் காப்பகத்திலும், கடலூர் கூர்நோக்கு இல்லத்திலும் தங்கி இருந்தவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.