கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் மிதந்த உடல்; போலீஸ் தீவிர விசாரணை

cuddalore ramanatham well incident

கடலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் அருகே உள்ளது வெங்கனூர். இந்த ஊரின் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை பாசனம் மூலம் விவசாயம் செய்வதற்காக அந்த நிலத்தில் பாசன கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலத்தை மருதமுத்து என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக விவசாய வேலை இல்லாததால் மருதமுத்து நிலத்தை பார்ப்பதற்கு செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் மாடுகளுக்கு தீவனம் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது பாசன கிணத்தில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு மனித உடல் தண்ணீரில் மிதப்பதை பார்த்து மருதமுத்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் ராமநத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் கிருபாலஷ்மி, சப் இன்ஸ்பெக்டர்கள் கோபி, கலியமூர்த்தி, ஜம்புலிங்கம்மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கிணற்றுக்கு விரைந்து சென்றனர்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த உடலை மீட்டனர்.

அந்த உடலின் கால்கள் இரண்டையும் கருங்கல் வைத்து சேர்த்து கட்டப்பட்டு தண்ணீர் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் அந்த உடலில் கைப்பந்து விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் வலை, டிஜிட்டல் பேனர் கொண்டு சுற்றப்பட்டு இருந்தது. இதன் மூலம் அந்த ஆண் உடலை யாரோ கொலை செய்து திட்டமிட்டு காலில் கல்லை கட்டி உடலில்வலை மற்றும் டிஜிட்டல் பேனர்களை சுற்றி கிணற்றில் கொண்டு வந்து வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காலில் கல்லை கட்டிய நிலையில் தண்ணீரில் கிடந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கிணற்றில் பிணமாக மிதந்தது யார் அந்த கிணறு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ளதால் அந்த நபரை யாராவது கடத்தி வந்து கொலை செய்து இங்கே வீசி விட்டு சென்றார்களா அல்லது உயிரோடு அவர் உடலில் கல்லையும் கைப்பந்து வலையை சேர்த்து கட்டி வீசி விட்டுச் சென்றார்களா, இப்படிப்பட்ட கொடூர செயலை செய்தது யார், இதற்கெல்லாம் விடை தேடிதனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ராமநத்தம் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Cuddalore police
இதையும் படியுங்கள்
Subscribe