சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, பெண்ணையாற்றின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மக்களின் தாகத்தையும் விவசாயத்தின் தேவையையும் நிறைவு செய்து கடலூர் அருகே கடலில் சென்று கலக்கிறது.
திருக்கோவிலூர் அருகே இரண்டாகப் பிரிந்து மலட்டாறு என்ற பெயருடன் அரசூர் கடந்து பண்ருட்டி வழியே சென்று கடலில் கலக்கிறது. இந்த மலட்டாற்றில் அதிகப்படியான மழை பெய்து பெண்ணையாறு நிரம்பி அதன் உபரி மலட்டாறில் செல்லும். இதன் கரையோர கிராமங்கள் இதன் மூலம் பாசனம் பெறும். 1972ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணல் திட்டுகள் ஏற்பட்ட பிறகு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது.
இதையடுத்து ஜீவநதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 1991ஆம் ஆண்டு அரசுக்கு முறையிட்டு பொதுப்பணித்துறை மூலம் மலட்டாறில் ஏற்பட்ட மணல் திட்டுக்களை அகற்றியுள்ளனர். அதன்பிறகு, அதிகப்படியான மழை பெய்யும்போது மலட்டாறில் வெள்ளம் வரும். மற்ற காலங்களில் வறண்டு கிடக்கும். இதனால் இதன் கரையோர கிராம மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மிகுந்த சிரமம் அடைவார்கள்.
தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் மலட்டாற்றில் வெள்ளம் வர வேண்டும் என்பதற்காக ஜீவநதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் இன்று வருண பூஜை நடத்தினார்கள். ஜீவநதி அமைப்பைச் சேர்ந்த தஷ்ணாமூர்த்தி தலைமையில் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஆற்றின் மையப்பகுதியில் முதலில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, பிறகு மழைக்கு அதிபதியான வருண பகவானையும் இந்திரனையும் வேண்டி வழிபாடு செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வழிபாடு நடத்தினால் 90 நாட்களுக்குள் மழை பெய்து மலட்டாறில் வெள்ளம் வரும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. இந்த மலட்டாறின் மூலம் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வருண பகவானும் இந்திரபகவானும் கண்விழித்து எங்களைப் பார்க்க வேண்டும். நல்ல மழையைக் கொடுத்து எங்களை வாழவைக்க வேண்டும், என்றார்கள் கரையோர கிராம மக்கள்.