Skip to main content

மகனின் கொடுமை தாங்காமல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய பெற்றோர்...!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Cuddalore parent son incident

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது பாண்டுரங்கன். இவரது மனைவி 70 வயது அஞ்சலை. இவர்களுக்கு அமிர்தலிங்கம் என்ற மகன் உள்ளார். அவருக்குத் திருமணமாகி மனைவி குழந்தைகள் என தனிக் குடும்பமாக வசித்து வருகின்றார். 

 

தாய் தந்தைக்கும் மகன் அமிர்தலிங்கத்திற்கும் இடையே குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு, கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 'பெற்றோர்களுக்குத் தனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை' என்று விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு குடும்பச் சொத்தில் இருந்து 1 லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 


ஆனால், அதன்பிறகும் அமிர்தலிங்கம் பெற்றோரை அடித்துத் துன்புறுத்தி மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டுரங்கன் அஞ்சலை தம்பதியினர் ஆவினங்குடி காவல் நிலையம், விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனப் பல்வேறு அதிகாரிகளுக்குப் பலமுறை புகார் அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. 


இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாண்டுரங்கன் அஞ்சலை தம்பதியினரை அவரது மகன் அமிர்தலிங்கம் வீட்டை விட்டு அடித்துத் துரத்தி விட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேவந்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிழற்குடையில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் நேற்று மாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாண்டுரங்கன் அஞ்சலை இருவரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்தத் தகவலை கேள்விப்பட்ட திட்டக்குடி வட்டாட்சியர் சையது அபுதாஹிர், அவர்கள் இருவரையும் நேரில் சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அவர் ஆவினங்குடி காவல் நிலையத்திற்குத் தொடர்புகொண்டு தம்பதியினர் பிரச்சனை குறித்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.