பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்திய பிரபல ரவுடி...என்.எல்.சி-யில் பரபரப்பு...!

என்.எல்.சி பாதுகாப்பு படை வீரரை ரவுடி கஞ்சா மணி கத்தியால் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Cuddalore-Neyveli-NLC-Rowdy attack Security Guard

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-15 என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன்(30). இவர் என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று மந்தாரக்குப்பம் ஒம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த மணி (எ) கஞ்சா மணி என்.எல்.சி சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு செல்லும் போது அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் செல்வேந்திரன் கஞ்சா மணியை பிடிக்க முயற்சித்தார்.

Cuddalore-Neyveli-NLC-Rowdy attack Security Guard

அப்போது அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரன் மீது குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளர் மீனாள் தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய கஞ்சா மணி மீது மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

மேலும் சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த அவன் தற்போது திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா மணி பாதுகாப்பு படை வீரரை கத்தியை கொண்டு மிரட்டுவதும், முட்டி போட வைத்து அடிப்பது போலவும் வீடியோ வைரலாக வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Cuddalore Neyveli nlc rowdy security officer
இதையும் படியுங்கள்
Subscribe