Skip to main content

திமுக கவுன்சிலருக்கு சாதி ரீதியாக அடக்குமுறை; வருத்தம் தெரிவித்த மேயர்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Cuddalore mayor sundari raja apologized to DMK councillor

கடலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வம், ஆணையர் காந்திராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்து இல்லாமல் தொடங்கியதால் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து முடிந்து தீண்டாமை உறுதிமொழி எடுத்து முறைப்படி துவங்கியது.

அப்போது திமுக கவுன்சிலர் சசிகலா, விசிக கவுன்சிலர் சரிதா எழுந்து அவர்களின் வார்டுகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது என்றும் இதுகுறித்து தொலைப்பேசியில் ஆணையரை தகவல் கொண்டால் தொலைப்பேசியை எடுக்க மறுக்கிறார் என்றும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மேயர், கவுன்சிலர்கள் தொலைப்பேசியை எடுத்துப் பேச வேண்டும் கோரிக்கைகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

அப்போது திமுக கவுன்சிலர்கள் தமிழரசன், பிரகாஷ், ஃபாருக் அலி, மகேஸ்வரி, கீர்த்தனா, சுமதி, சாரத்  ஆகிய 8 திமுக கவுன்சிலர்கள் அவர்களின் வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும் ஏன் எங்களுக்கு மட்டும் பாகுபாடு எந்த ஒரு பணியும் செய்து கொடுக்க மறுக்கிறீர்கள். குறிப்பாகப் பத்து வார்டுகளின் உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்ற நோக்கில் பணிகள் செய்து தர மறுக்கிறீர்களா? நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று  நீங்கள் விருப்பப்பட்டால் ராஜினாமா செய்கிறோம் என மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிதி நிலைமை இல்லை சரியானவுடன் செய்து கொடுக்கிறோம் என மேயர் பதிலளித்தார்.

இதற்கு எதிராக சில திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உங்கள் இருக்கைக்கு சென்று பேசுங்கள் எனக் கூறினார்கள். இதனால் இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயருக்கு ஆதரவான திமுக கவுன்சிலர் விஜயலட்சுமி செந்தில் என்பவர் கையில் பன்றி படத்தை வைத்துக் கொண்டு 44 ஆவது வார்டு கவுன்சிலர் கீர்த்தனாவை பன்னி மேய்க்கிற நீ எல்லாம் கேள்வி கேக்குறியா? எனச் சாதிப்பெயர் சொல்லி கேட்டார் என மாமன்றத்தில் கவுன்சிலர் கீர்த்தனா கூச்சலில் ஈடுபட்டார்.  இவருக்கு ஆதரவாக ஏற்கனவே முற்றுகையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள் விஜயலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

கவுன்சிலர் விஜயலட்சுமி மாமன்றக் கூட்டத்தில் சக திமுக கவுன்சிலரை சாதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் கேவலப்படுத்துவதை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் மற்றும் ஆணையரிடம் 10 திமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து முறையிட்டனர். அப்போது பேசிய மேயர், சாதி ரீதியாக பேசிய மாமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ஆனால் கவுன்சிலர் விஜயலட்சுமி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் மாமன்ற கூட்டத்தில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு மேயர் சுந்தரி ராஜா வருத்தம் தெரிவித்தார். பின்னர் கூட்டத்தை முடித்தார். இதற்கு சமாதானமாகாத கீர்த்தனா உள்ளிட்ட 8 திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து மன்றக் கூட்டத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த பிரச்சனை தற்காலிகமாக சரியாகியது.

இதுகுறித்து மாநகராட்சியில் உள்ளவர்கள் கூறுகையில், கடந்த மேயர் தேர்தலின் போது 10 திமுக கவுன்சிலர்கள் மேயர் சுந்தரி ராஜாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதனையொட்டி இவர்கள் வார்டுகளில் உள்ள குறைகளைத் தீர்ப்பதில் சுனக்கம் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் மாமன்றக் கூட்டம் நடைபெறும் போது இந்த பிரச்சினை எழுகிறது. தற்போது ஒருபடி மேலே போய் சாதி மற்றும் தொழில் ரீதியாக கேவலப்படுத்தி அடக்குமுறை நடக்கிறது. இதற்குத் தமிழக முதல்வர் தலையிட்டு நிரந்தர நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே இது சரியாகும் என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.